சர்வதேச முதலீட்டுச் சந்தையில் சுமார் 200 சதவீதம் லாபத்தை அள்ளிக்கொடுத்த பிட்காயின் 24,200 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்த பின்பு தடாலடியாக 22,100 டாலர் வரையில் சரிந்துள்ளது. பிட்காயின் வீழ்ச்சிக்கும் அடைந்த இதே வேளையில் பிரிட்டனில் புதிய கொரோனா தொற்று குறித்து அறிவிப்பு வெளியானது.
பிரிட்டன் நாட்டில் புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டு ஐரோப்பா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படும் என நிலை உருவாகியுள்ளதால், பிட்காயின் மீதான முதலீடுகள் அதிகரித்து 25,000 அளவீட்டைத் தாண்டும் என எதிர்பார்த்தபோது திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சரிவுக்கு என்ன காரணம்...?
கொரோனா தடுப்பூசி
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைத் தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களுக்குச் செய்யப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மீது திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மீது முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
இதன் விளைவாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 24,222 டாலர் என்ற உயர்வை அடைந்த நிலையில் நிறுவன முதலீட்டாளர்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி முக்கிய முதலீடாக மாறியது.
இதுமட்டும் அல்லாமல் ஸ்கொயர் மற்றும் பேபால் நிறுவனத்தில் கிரிப்டோ சொத்துக்கள் மீது செய்த முதலீடுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
சைபர் அட்டாக்
இந்தத் தருணத்தில் Ledger என்ற கிரிப்டோ வன்பொருள் சேமிப்பு தளத்தின் மீது சைபர் அட்டாக் செய்யப்பட்டு 2,70,000 வாடிக்கையாளர்களின் ஈமெயில், முகவரி, போன் நம்பர் ஆகியவை திருடப்பட்டது. இந்தத் தகவல் அனைத்தும் ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
பிட்காயின் திருட்டு
இதன் வாயிலாகப் பிட்காயின் மதிப்பு சுமார் 6 சதவீதம் சரிந்து 22,000 டாலருக்கும் குறைவான மதிப்பிற்கு வீழ்ந்தது. தற்போது திருடப்பட்ட தகவல்கள் தனிநபர் தகவல்கள் மட்டுமே என்றாலும் கடந்த காலத்தில் பல வர்த்தகத்தில் பிட்காயின் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஹேக்கிங் மூலம் முதலீட்டாளர்களுக்குப் பழைய பாதிப்புகள் நினைவிற்கு வந்துள்ளது.
பிட்காயின் விற்பனை
இதனால் பல சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள் பயத்தின் காரணமாக அதிகளவிலான பிட்காயினை விற்பனை செய்தனர். இதன் காரணமாகவே பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்திலும் பிட்காயின் மீதான வர்த்தகம் மந்தமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.