கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன.
கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி முன்பு தடை விதித்திருந்தது. இதனால் இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டவிரோதமாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அந்த தடையை நீக்கி, இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய காலங்களில் இந்த பிட்காயின் வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
நீண்டகால முதலீட்டிற்கு நல்ல ஆப்சன்
இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். இது 2030ல் 1 கோடி ரூபாயினை எட்டும் என்றும் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல ஆப்சன் என்றும் கூறியுள்ளனர். இது டாலரில் கடந்த செவ்வாய்கிழமையன்று 19,000 டாலர்களை தொட்டது. இதுவே ரூபாயில் 14.22 லட்சம் ரூபாயினையும் தொட்டது.
பிட்காயின் என்றால் என்ன?
அதெல்லாம் சரி பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்று. உலகளாவிய பண செலுத்தும் ஒரு முறையாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
முதலீடுகள் ஒப்பீடு
மற்ற முதலீடுகள் பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பதால் அவைகள் ஒரு சீரற்ற முறையில் உள்ளன. ஆனால் பிட்காயின் வர்த்தகம் இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இது தேவை மற்றும் சப்ளையை பொறுத்தே வர்த்தகமாகிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நிபுணர்களின் கணிப்பு
ஆக வல்லுனர்கள் நீண்ட கால முதலீட்டிற்கு இது ஏற்ற ஒரு திட்டம் என்றும் கணித்துள்ளனர். ZebPayவின் தலைமை நிர்வாக அதிகாரி 2030க்குள் பிட்காயின் 1 கோடி ரூபாயினை எளிதில் எட்டலாம். ஆக இதில் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
பிட்காயின் மதிப்பு நடப்பு ஆண்டில் சுமார் 164.81% அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது. ஆக நிபுணர்கள் கூறுவது போல 1 கோடி ரூபாயினை தொடலாம் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.