கிரிப்டோகரன்சி சந்தையில் அதிகளவிலான முதலீட்டாளர்களும், முதலீடுகளும் சீனாவில் இருந்து வந்த நிலையில், சீன அரசின் அதிரடியான தடைக்குப் பின்பு கிரிப்டோகரன்சி சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் மாற்றம் கிரிப்டோகரன்சியை நேரடியாகவும், அதிகமாகவும் பாதிக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி
கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு எதிரொலியாகப் பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது போல் கிரிப்டோகரன்சி சந்தையிலும் மோசமான சரிவு பதிவானது. இந்த மோசமான வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு சுமார் 10% வரையில் சரிந்தது.
கிரிப்டோகரன்சி சந்தை
இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சி சந்தையில் மிக முக்கியமான கரன்சியான பிட்காயின் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 5% சரிந்து $32,860.91 ஆகச் சரிந்தது. இதேபோல் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் அதிகப்படியாக $32,650.02 வரையில் சரிந்தது இது ஜூலை 2021-க்குப் பின் பதிவான குறைந்த அளவாகும்.
பிட்காயின் விலை
பிட்காயின் விலை நவம்பர் 2021 இல் அதன் உச்ச விலையான $68,990.90 இலிருந்து இன்று கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. இதேவேளையில் தான் அமெரிக்கப் பங்குச்சந்தையின் நாஸ்டாக், டாவ் ஜோன்ஸ் ஆகியவை 2020க்கு பின்பு மோசமான நிலையைப் பதிவு செய்தது.
பிட்காயின் விலை
தற்போது பிட்காயின் விலை 4.68 சதவீதம் சரிந்து 33,0112.44 டாலரை எட்டியுள்ளது. இதேபோல் கடந்த 90 நாட்களில் 24.66 சதவீதம் சரிந்துள்ளது. கிரிப்டோகரன்சியின் தொடர் சரிவுக்கு முக்கியமான காரணம் டாலர் மதிப்பு வரலாறு காணாத வரையில் அதிகரித்துள்ளது தான்.
நாணய மதிப்பு
அரசு வெளியிடும் நாணயங்கள் குறிப்பாக அதிகப் பயன்பாட்டில் இருக்கும் நாணயங்களின் மதிப்பு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் கிரிப்டோகரன்சியின் தேவையும் அவசியமும் இல்லை. இதேபோல் கொரோனா தொற்றுக் காலத்தில் நாணய மதிப்பு லாக்டவுன் மற்றும் மந்தமான வர்த்தகம் காரணமாக வீழ்ச்சி அடையும் போது இதே பிட்காயின் விலை 68,990.90 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.


Click it and Unblock the Notifications