உலக நாடுகள் பணவீக்க பாதிப்பால் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் நாணய மதிப்பு கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் கிரிப்டோ முதலீட்டு சந்தை கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து சரிவடைந்து வருகிறது, குறிப்பாகச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சரிவை கண்டு கிரிப்டோ முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர் வடிக்கத் துவங்கியுள்ளனர்.
பிட்காயின்
சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின், சனிக்கிழமை பிற்பகுதியில் தொடர்ந்து 12 வது நாளாகச் சரிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தது மட்டும் அல்லாமல் பிட்காயின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது.
சனி, ஞாயிறு
பிட்காயின் விலை சனிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 15% வரை சரிந்து 17,599 டாலராக ஆகச் சரிந்தது. இதன் பின்பு இந்தப் பெரும் சரிவில் இருந்து கணிசமாக மீண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு பிட்காயின் விலை 19,075 டாலர் வரையில் உயர்ந்தது. கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த சந்தை மதிப்பு ஞாயிற்றுக்கிழமை 881 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது நவம்பர் 2021 இல் 3 டிரில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோ முதலீட்டாளர்கள்
இந்நிலையில் திங்கட்கிழமை எப்படியிருக்கும் எனப் பயத்துடனே இருந்த கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு ஆனந்த கண்ணீர் விடும் அளவிற்கு ஒரு பிட்காயின் விலை 7.94 சதவீதம் வரையில் உயர்த்தி 20,662.12 டாலர் வரையில் உயர்ந்தது.
57 சதவீதம் சரிவு
சனிக்கிழமை பதிவான 17599 டாலர் வரையிலான சரிவில் இருந்து மீண்டும் 20000 டாலருக்கு வந்துள்ளது பெரிய விஷயமாக இருந்தாலும் பிட்காயின் 2022ல் 57 சதவீதமும், ஜூன் மாதம் 37 சதவீதமும் சரிந்துள்ளது. இதனால் பிட்காயின் மீண்டும் 2017ஆம் ஆண்டு உயர்வுக்குச் சென்றுள்ளது.
பெரு முதலீட்டாளர்கள்
இந்நிலையில் இந்தச் சரிவு மீண்டும் தொடர்ந்தால் கட்டாயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இதேபோல் பெரும் முதலீட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் கிரிப்டோகரன்சி சொத்துகளை விற்பனை செய்து பணமாக்க முடிவு செய்துள்ளனர், இதனாலேயே பல கிரிப்டோ வர்த்தகத் தளங்கள் கிரிப்டோ வித்டிராவல்-ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.