கடந்த சில மாதங்களாகவே பெருமளவில் சரிந்து வந்த கிரிப்டோ கரன்சிகள் அதில் இருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன. குறிப்பாக கண்ணீரில் இருந்த பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு இப்போது தான் நல்ல செய்தியே வர தொடங்கி இருக்கிறது.
பிட்காயின் மதிப்பு கடந்த ஒரு வாரமாக மிகப்பெரிய அளவில் உயர்வு கண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிட்காயின் விலை 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 62,950 டாலர்களாக இருந்த பிட்காயின் விலை, வெள்ளிக்கிழமை நிலவரப்படி 79,450 டாலர்களை தாண்டியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்கிட்டால், வெறும் ஒரே வாரத்தில் பிட்காயின் விலை சுமார் 16 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த வார வெள்ளியன்று 60.17 லட்சமாக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது 76.07 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து ஒரு வாரமாக உயர்வு கண்டுள்ளது. அமெரிக்க அரசு அண்மையில் எடுத்த கிரிப்டோ கொள்கை சார்ந்த நடவடிக்கைகளால் சந்தையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தையை நோக்கி வர தொடங்கியுள்ளனர்.
அடுத்ததாக ஸ்பாட் பிட்காயின் இடிஎஃப் முதலீடுகள் கடந்த மே மாதத்திற்குப் பிறகு தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன. அதாவது இனி வரும் காலம் பிட்காயின் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்த நிலையில் தற்போது சற்றே சரிந்து ஒரு நிலைக்கு வந்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கம் , கிரிப்டோ சந்தைகளை நோக்கி பணத்தை திருப்பிவிட்டுள்ளனர். இதனால் பிட்காயின் மட்டுமில்லாமல், எத்தேரியம் (Ethereum), எக்ஸ்ஆர்பி (XRP), சோலானா (Solana), டோஜ்காயின் (Dogecoin) போன்ற கிரிப்டோ கரன்சிகள் ஒரு வாரத்தில் 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
நீண்ட காலத்திற்கு பின் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு உயர்ந்திருந்தாலும் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சந்தை இவ்வளவு வேகமாக உயர்ந்திருப்பதால், ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், படிப்படியாக முதலீடு செய்வது நல்லது என்கின்றனர்.
இது வெறும் குறுகிய கால ஏற்றமா அல்லது நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமா என்பதை உணர்ந்து, சந்தையின் அடிப்படை நிலைகளை கவனிக்க வேண்டும் என்கின்றனர். ஒவ்வொரு முதலீட்டாளரும் தனது ரிஸ்க் எடுக்கும் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் கிரிப்டோ சந்தை திடீர் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் ஒரு முதலீடு என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
2025ஆம் ஆண்டு அக்டோபரில் பிட்காயின் மதிப்பு சுமார் 126,000 டாலரை எட்டியது. தற்போது தன்னுடைய வரலாற்று உச்சத்தை விட இன்னும் 37 சதவீதம் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த ஏற்றத்தை முழுமையாக நம்பிவிடாமல், நிதானமாக செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

