மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவித்தது, இதனைத் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் உள்ளது.
இன்றைய கிரிப்டோகரன்சி சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 9 சதவீதம் வரையில் உயர்ந்து 38000 டாலரை தாண்டியுள்ளது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
சீனாவின் தடை உத்தரவும், டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் பிட்காயின் மீதான நிலைப்பாடு ஆகியவற்றை மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.
இந்நிலையில் எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் நேற்று எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளது.
எல் சல்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 1 கோடி வாடிக்கையாளர்கள் பிட்காயின் வர்த்தகச் சந்தைக்குள்ள நுழைந்துள்ளனர் என்றும் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிட்காயின் தயாரிப்பிலும் இறங்க உள்ளதாக அறிவித்துள்ள எல் சல்வடோர் நாட்டின் அரசு, இதன் உற்பத்திக்கு எரிமலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் குறுகிய காலத்தில் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையிலும் பிட்காயின் வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.