டெஸ்லா பேமெண்ட் முறை ரத்து, சீன அரசின் கிரிப்டோ வர்த்தகத் தடைக்குப் பின்பு பிட்காயின் மட்டும் அல்லாமல் அனைத்து கிரிப்டோகரன்சி மதிப்பு பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது.
இதனால் உலகம் முழுக்க இருக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோ நிலையற்றது என மனப்போக்கும், இனி பிட்காயின் மதிப்பு உயர வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கருத்து நிலவிய வேளையில், உலக நாடுகளில் பல பகுதியில் இருந்து புதிய முதலீடுகள் குவியும் காரணத்தால் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிட்காயின் மதிப்பு
இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு அதிகப்படியாக 10 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து 36,721.11 டாலரில் இருந்து 40,894.44 டாலர் வரையில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2 வார இடைவேளையில் பிட்காயின் மதிப்பு 40000 டாலரைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பிட்காயின் விலை கணிப்பு
மேலும் அடுத்த சில வாரங்களுக்குப் பிட்காயின் தொடர்ந்து 40000 டாலர் முதல் 42000 டாலர் வரையிலான விலையில் தொடர்ந்து நிலைப்பெற்று வர்த்தகம் செய்யப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியக் கிரிப்டோகரன்சிகளின் விலை
பிட்காயின் மாலை 6 மணிக்கு 8.63 சதவீத உயர்வில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் எதிரியம் 17 சதவீத வளர்ச்சியில் 2,860.62 டாலருக்கும், ரிப்பிள் 13.07 சதவீத வளர்ச்சியில் 1.04 டாலருக்கும், டோஜ்காயின் 7.54 சதவீத வளர்ச்சியில் 0.35 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
2.25 டிரில்லியன் டாலர் சந்தை
சர்வதேச சந்தையில் மொத்தம் 7,459 கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மே 16ஆம் தேதி மொத்த கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு 2.25 டிரில்லியன் டாலராக இருந்தது, இந்நிலையில் எலான் மஸ்க் மற்றும் சீன அரசின் முடிவுகள் வெளியான பின்பு பெரிய அளவிலான சரிவு அடைந்துள்ளது.
748 பில்லியன் டாலர் நஷ்டம்
இந்நிலையில் 23ஆம் தேதி வர்த்தக முடிவில் கணக்கிட்ட போது மொத்த கிரிப்டோ சந்தையின் மொத்த மதிப்பு 2.25 டிரில்லியன் டாலரில் இருந்து 1.50 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 748 பில்லியன் டாலர் மதிப்பீட்டை கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.