கிரிப்டோகரன்சி சந்தையின் மிக முக்கிய வர்த்தக நாணயமாக விளங்கும் பிட்காயின் கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான வர்த்தக மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அதிகளவிலான சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள் வெளியேறினர்.
முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட வெளியேற்றத்தின் காரணமாகக் கடந்த 4 நாட்களாகப் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் புதிய முதலீட்டாளர்களின் வருகை காரணமாகப் பிட்காயின் மதிப்பு 56,000 டாலரைத் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெருமளவில் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிட்காயின் மதிப்பு
புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு அதிகப்படியாக 57,336 டாலர் அதாவது வராலற்று உச்ச அளவீட்டை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 55,470 அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு
நேற்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியின் காரணமாகப் பிப்ரவரி 19ஆம் தேதிக்குப் பின் மீண்டும் பிட்காயின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 91.97 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலீடுகள் அதிகரிப்பு
பல முன்னணி நிறுவனங்களும், பெரும் டெக் நிறுவன தலைவர்களும் பிட்காயின் மீது முதலீடு செய்யும் காரணத்தால் வர்த்தகத் துறையில் பிட்காயின் ஒரு மேம்பட்ட சொத்து முதலீடாகத் திகழ்கிறது. இதனால் பிட்காயின் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அமெரிக்கப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்
இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி சந்தையிலும் அதிகளவிலான பணப்புழக்கம் இருக்கும். இதில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய உச்சத்தை அடையலாம்
இதன் வாயிலாக அடுத்த சில நாட்களுக்குப் பிட்காயின் மீதான முதலீடு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதன் மதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் பிட்காயின் மதிப்பு தனது வரலாற்று உச்ச அளவான 58,332.36 டாலரையும் தாண்ட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.