கடந்த 10 மாதங்களில், இந்தியாவில் பலமாக அடி வாங்கிய துறைகளில், ஆட்டோமொபைல் துறைக்குத் தான் முதல் இடம். தொடர்ந்து விற்பனை வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் என பயங்கரமான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளில், வேலை இல்லா நாட்கள் கூட கொண்டு வரப்பட்டன. அதோடு சில நிறுவனங்களில் போனஸ் எல்லாம் கூட ஊழியர்கள் கேட்கும் அளவுக்கு கொடுக்க முடியாது என கை விரித்தது ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
இந்த கடுமையான சூழலில், ஆயிரக் கணக்கான ஊழியர்கள், வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள். ஆனால் இங்கு ஒரு பாஜக அமைச்சரோ, உண்மை நிலைமை புரியாமல் பேசி இருக்கிறார்.
அமைச்சர் பேச்சு
"நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆட்டோமொபைல் துறை ஒரு மாற்றத்தை எதிர் கொண்டு இருக்கிறது. பாரத் ஸ்டேஜ் 4 முதல் பாரத் ஸ்டேஜ் 6-க்கும் வரும் ஏப்ரல் 01, 2020-க்குள் மாற இருக்கிறது. இது உச்ச நீதி மன்றம் விதித்த காலக் கெடு".
கவலை வேண்டாம்
"அதோடு நாம் மின்சார வாகனங்களுக்கும் மாற வேண்டி இருக்கிறது. நாம் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டோமொபைல் துறையில் யாருடைய வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் இல்லை" எனச் சொல்லி இருக்கிறார் கன ரக தொழில் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சொல்லி இருக்கிறார்.
286 டீலர்கள்
இந்தியா முழுக்க, சுமாராக கடந்த 24 மாதங்களில், 286 ஆட்டோமொபைல் டீலர்கள் தங்களால் வியாபாரத்தைச் செய்ய முடியாமல் கடையைச் சாத்திவிட்டார்கள். Federation of Automobile Dealers Associations (FADA) அமைப்பே இந்த டீலர்கள் கடையை மூடியதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
எந்த மாநிலம்
286 மூடப்பட்ட டீலர்களில் மாநில வாரியாக மகாராஷ்டிராவில் 84 டீலர்கள், தமிழகத்தில் 35 டீலர்கள், டெல்லியில் 27 டீலர்கள், பீகாரில் 26 டீலர்கள், ராஜஸ்தானில் 21 டீலர்கள் என மேலே சொன்ன மாநிலங்களில் மிக அதிக அளவில் டீலர்கள் ஆட்டோமொபைல் வியாபாரத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
வேலை இழப்புகள்
இந்த 286 டீலர்களினால் சுமார் 32,000 பேரின் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரீடா லங்கலிங்கம் என்கிற தமிழகத்தைச் சேர்ந்த, பெண் ஆட்டோமொபைல் டீலர் தற்கொலை செய்து கொண்டதும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
1 லட்சம் பேர்
கடந்த ஆகஸ்ட் 2019-ல் "இந்திய ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சுமார் 1 லட்சம் பேரின் வேலை பறி போய்விட்டது. இதே நிலை தொடர்ந்தால் சுமாராக 10 லட்சம் பேரின் வேலை பறி போகலாம்" என Automotive Components Manufacturers Association of India (ACMA)என்று அழைக்கப்படும் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சொன்னது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மற்ற நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி தன் 3,000 ஒப்பந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியது, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தன் 1,500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியது என ஒரு பெரிய பட்டியலையே வாசிக்கலாம். அப்படி கொஞ்சம் வெளிநாடு போவோம்.
வெளிநாட்டு நிறுவனங்கள்
கடந்த மே 2019-ல் ஃபோர்ட் நிறுவனம் சுமார் 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னது. சமீபத்தில் மெர்சிடஸ் பென்ஸ் சுமாராக 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொன்னது, பி எம் டபிள்யூ தன் ஊழியர்களுக்கு போனஸ் தொகையைக் குறைத்து இருப்பது என பல சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தடுமாறிக் கொண்டு இருப்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
ஆடி
சமீபத்தில் ஜெர்மானிய சொகுசு கார் நிறுவனமான ஆடி நிறுவனத்தில், சுமாராக 9,500 பேரை தேர்வு செய்து வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்கள் என்கிற செய்தியும் வெளியானது. தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சில வேலைகள் தேவையே இல்லை. அதே போல மின்சார வாகனங்களை குறைந்த நபர்களைக் கொண்டே தயாரித்து விட முடியும் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். ஆக இனி வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கலாம்.
அபத்தம்
இப்படி உள் நாட்டு நிறுவனங்கள் தொடங்கி, வெளிநாட்டு சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை பலரின் வேலைக்கு உலை வைக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... ஒரு மத்திய அமைச்சர், இப்படி ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் வேலைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என அபத்தமாகப் பேசி இருக்கிறார்.
புது உருட்டு
சமீபத்தில் கூட "இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், மத்திய அரசின் பெயரைக் கெடுக்கவுமே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருக்கிறது என்றால், சாலைகளில் ஏன் இவ்வளவு டிராஃபிக் ஜாம் ஆகிறது..?" என கேள்வி எழுப்பி இருந்தார் பாஜக எம்பி வீரேந்திர சிங் மஸ்த்.
நிதி அமைச்சர்
இவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, இந்திய இளைஞர்கள் புதிய வாகனங்களை வாங்கினாலேயே, ஆட்டோமொபைல் சரிவு சரியாகிவிடும் எனச் சொனார். அதோடு, இளைஞர்கள் ஓலா, உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார்களை அதிகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் ஆட்டோமொபைல் துறை விற்பனை சரிந்து கொண்டு இருக்கிறது எனச் சொன்னதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.