அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமாகத் திகழும் பிளாக்ராக் உலகம் முழுவதும் முதலீடு செய்து வரும் நிலையில், சமீப காலமாக இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலீட்டு அளவை குறைத்துவிட்டுச் சீனா பக்கம் திருப்ப முடிவு செய்து உள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்..?!
சீனா நிறுவன மதிப்பீடு
சீனா நிறுவனங்களின் மதிப்பீடு சரியாக இருக்கும் காரணத்தாலும், சீனா - அமெரிக்கா இடையிலான பிரச்சனை விரைவில் குறைந்து இரு நாடுகளுக்கும் மத்தியிலான கொள்கை ரீதியான தடைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்ராக்
இதன் வாயிலாக அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் இந்தியப் பங்குகளில் முதலீட்டைக் குறைத்துச் சீனாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் இப்போது தான் சீனா அரசின் நடவடிக்கையால் டெக் நிறுவனங்களின் மதிப்பீடுகள் குறைந்து சந்தைக்கு ஏற்ப உள்ளது.
ஆசிய பசிபிக் தலைவர்
பிளாக்ராக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் முதலீட்டுப் பிரிவின் தலைவரான பெலிண்டா போவா கூறுகையில் தற்போது நிறுவனங்களின் மதிப்பீடு தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய முதலீடுகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையில் லாபம் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
அமெரிக்கா - சீனா
இதேவேளையில் சீனாவில் வளர்ச்சி அடையும் பங்குகள் அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதன் மதிப்பீடும் பெரிய அளவில் சாதகமாக உள்ளது. இதனால் சீனாவில் அடுத்த வருடம் முதல் அமெரிக்கா - சீனா இடையிலான கொள்கை தளர்வுகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்திய சந்தை
உலக நாடுகள் இந்தியச் சந்தையில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்து வந்த நிலையில், பல தரகு நிறுவனங்கள் குறைவான ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பணப்புழக்கத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஐபிஓ தோல்வி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.