இந்தியா சீன எல்லை பிரச்சனையைத் தொடர்ந்து நாட்டு மக்கள் சீன பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது எதிர்ப்பு காட்டி வரும் வேளையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களும் சீன பொருட்களைக் கொண்டு வர்த்தகம் செய்வதில் தடை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்தத் தீபாவளி பண்டிகையில் மட்டும் இந்திய வர்த்தகர்கள் எடுத்துள்ள முடிவின் காரணமாகச் சீனா ஏற்றுமதியாளர்கள் சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக இழக்க நேரிடும் என நாட்டின் வர்த்தக அமைப்பான CAIT அமைப்பின் தேசிய தலைவர் பிசி பார்தியா தெரிவித்துள்ளார்.
40,000 கோடி ரூபாய்
பொதுவாகத் தீபாவளி காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும், இதில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீன தயாரிப்பு அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டுத் தீபாவளி பண்டிகையில் வர்த்தகர்கள் சீன பொருட்களை இறக்குமதி செய்யத் தடை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக இழப்பை இந்தப் பண்டிகை காலத்தில் மட்டும் சீனாவில் எதிர்கொள்ள நேரிடும்.
20 பேர் பலி
இந்திய எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்திய நிலையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் இரு நாடு அரசு மத்தியில் பிரிவை ஏற்படுத்தியது. இது இந்திய மக்களையும் அதிகளவில் பாதித்துள்ளது என்பதால் அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பு (CAIT) சீன பொருட்களை இறக்குமதியோ அல்லது விற்பனையோ செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது.
இந்திய வர்த்தகர்கள்
இதன் மூலமா இந்திய வர்த்தகர்கள் தற்போது தீபாவளி பண்டிகை தேவையான அனைத்து பொருட்களையும் அளவிற்கு அதிகமாகவே இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் உள்நாட்டு உற்பத்தியாளர்களையும், சிறு குறு தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது இந்த CAIT அமைப்பு.
வர்த்தகச் சந்தை
இந்த வருடப் பண்டிகை காலத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆன்லைன் வர்த்தகச் சந்தையின் வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டில் அக்டோபர் மாத ஆன்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அளவு 28 மில்லியன் இருந்த நிலையில், இந்த ஆண்டு 45-50 மில்லியன் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் கடந்த வருடம் 2.7 பில்லியன் டாலராக இருந்த பண்டிகை கால வர்த்தகம் இந்த ஆண்டு 4 பில்லியன் டாலர் அளவில் இருக்கும்.