உலகம் முழுவதும் தற்போது புதுப்பிக்கதக்க ஆற்றலின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இது மாபெரும் வணிகமாக உருவெடுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தனியார் நிறுவனங்கள் கூட இதனை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டன.
இதற்கிடையில் தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு வணிகத்திற்கு மாற்றாக, எதிர்கால நலன் கருதி, புதுபிக்கதக்க ஆற்றல் வணிகத்தினை மேம்படுத்த பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றன.
சமீபத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியும் பெரும் முதலீடுகளை செய்யவுள்ளதாக அறிவித்தனர்.
ரூ.25,000 முதலீடு
இதற்கிடையில் தான் தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், புதுப்பிக்கதக்க ஆற்றல் வணிகத்திற்காக 2040க்குள் 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்திய அரசு 2070-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை இலக்காக வைத்துள்ள நிலையில், அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலை
இந்த மிகப்பெரிய முதலீட்டின் மூலம் பிபிசிஎல் நிறுவனம் 10 ஜிகாவாட் புதுப்பிக்கதக்க ஆற்றலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது 45 மெகாவாட் திறனை கொண்டுள்ளது.
சர்வதேச அளவிலான எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ப காற்றாலை மற்றும் சோலார்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டன. அவை தூய்மையான ஆற்றலை நோக்கி காலடி எடுத்து வைத்து வருகின்றன. இதற்கிடையில் தான் பிபிசிஎல்லின் இந்த மாற்றமும் வந்துள்ளது.
பசுமை ஆற்றலில் முதலீடு
இந்தியாவினை பொறுத்தவரையில் தனியார் ஜாம்பவான்களான அம்பானியும், அதானியும் மிகப்பெரிய முதலீட்டு இலக்கினை திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பிபிசிஎல்லின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது பிபிசிஎல் தனது சந்தை இருப்பினை அப்படியே தக்கவைத்துக் கொள்ள, எடுத்து வைத்திருக்கும் மிகப்பெரிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் 0 கார்பன் உமிழ்வு இலக்கினையும் அடைய ஏதுவாக இருக்கும்.
படிப்படியாக முதலீடு
பிபிசிஎல்லில் இந்த முதலீட்டு திட்டத்தினை அறிவித்துள்ள நிலையில், அதன் சுத்திகரிப்பு நடவடிக்கையிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளை ஈடுகட்டும் அளவுக்கு, இந்த முதலீடு 2040க்குள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் 2022 - 23ம் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் சில கையகப்படுத்தல்களை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 2025க்குள் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார் திட்டத்தினையும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.