டெல்லி : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான பாரத் பெட்ரோலியத்தின் பங்கு விற்பனைக்கு, முதல் கட்டமாக மூன்று பேர் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவாயை அதிகரிக்க, மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே 2.1 லட்சம் கோடி இலக்கு வைத்தது.
இதன் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்க, கேபினெட் அமைச்சகமும் சமீபத்தில் அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசிஎல் பங்கு விற்பனை
இதற்கிடையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றது எனலாம். ஏனெனில் ஏற்கனவே இதற்கு மார்ச் 2021க்குள் தனியார்மயமாக்கும் வேலைகள் நிறைவடையாலம் என்றும் செய்திகள் வெளியாகின. மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 52.98% பங்கினை விற்கலாம் என்றும், இதற்கான expression of interest தெரிவிக்க கடைசி தேதியாக கடந்த நவம்பர் 16 அறிவித்திருந்தது.
யார் யார் விண்ணப்பம்?
அரசுக்கு சொந்தமான, நீண்டகாலமாக எரிபொருள் சில்லறை விற்பனை துறையில் இருக்கும் இந்த பிபிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க, மூன்று பேர் தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதில் ஒன்று வேதாந்தா. கடந்த நவம்பர் 18 அன்றே வேதாந்தாவும் இதனை உறுதிபடுத்தியது.
சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம்
மற்ற இரண்டு ஏலதாரர்கள் சர்வதேச முதலீட்டாளர்களாகும். ஒன்று அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் என கூறியுள்ளார். எனினும் மற்ற முழு விவரங்கள் கொடுக்கப்படவில்லை.
தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2 சதவிகித பங்கு விற்பனை கூட 25,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைகும் என்றும் கூறப்பட்டது.
பிபிசிஎல்லின் திறன்
பிபிசிஎல் நிறுவனம், மும்பை, கொச்சின், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்புகளை செய்து வருகிறது. இது சுமார் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை எரிபொருளாக மாற்றும் திறன் கொண்டது என்றும், இதற்கு 15,078 பெட்ரோல் பம்புகளும், 6004 எல்.பி.ஜி விநியோகஸ்தர்களும் உள்ளனர் என்பது கவனிக்கதக்கது விஷயம்.