2026 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கிறது. தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்குகிகிறது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டிற்காக டெல்லி முழுவதும் விமான நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் மாநாட்டு மையம் அமைந்துள்ள பகுதிகள் உள்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் 12ஆம் தேதி முதல் நாளில் பிரிக்ஸ் அமைப்பின் 11 முழு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். செப்டம்பர் 13 ஆம் தேதி கூட்டணி நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் கூட்டணி நாடுகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள்:
சீனா: அதிபர் சீ ஜின்பிங்
ரஷ்யா: அதிபர் விளாடிமிர் புதின்
தென் ஆப்பிரிக்கா: அதிபர் சிரில் ராமபோசா
இந்தோனேசியா: அதிபர் பிரபோவோ சுபியான்டோ
ஐக்கிய அரபு அமீரகம் : அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
பிரேசில்: வெளியுறவு துறை அமைச்சர் மௌரோ வியீரா
இவர்கள் தவிர எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். மேலும் பிரிக்ஸ் கூட்டணி நாடுகளான பெலாரஸ், கஜகஸ்தான், மலேசியா, தாய்லாந்து, கியூபா, நைஜீரியா, உஸ்பெகிஸ்தான், உகாண்டா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அந்தோனி குத்தாரெஸ் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டை முன்னிட்டு சீனாவிலிருந்து பெரிய அளவிலான வணிக குழு ஒன்று இந்தியா வந்துள்ளது. இந்த மாநாட்டில் பன்முகத்தன்மை , வர்த்தகம் மற்றும் முதலீடு , எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு , தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சேவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் 2010இல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது. அதை தொடர்ந்து 2024இல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்தன. சமீபத்தில் இந்தோனேசியாவும் இதில் முழு உறுப்பினராக இணைந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் மூலம் ரஷ்யா, சீனா, இந்தியா நெருக்கமாக செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சீனா மற்றும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்து வர்த்தக மோதலில் ஈடுபட்டுள்ளது, அதே வேளையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் எதிரியாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு எதிரான மூன்று நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணையும் மாநாடகாக பிரிக்ஸ் மாநாடு அமைந்துள்ளது. இதனால் அமெரிக்கா உற்றுநோக்கும் ஒரு மாநாடாக இது அமைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications


