ரஷ்யா உடனான போரில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலக நாடுகள் பல வகையில் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்குப் பயன்படும் விதமாகப் பிரிட்டன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் போர் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைன் நாட்டின் வர்த்தகச் சந்தை மீண்டு வர முடியும்.
உக்ரைன் பொருளாதாரம்
உக்ரைன் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் அந்நாட்டில் இருந்து பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதான வரியும் முழுமையாக நீக்கப்பட உள்ளதாகத் திங்கட்கிழமை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இது உக்ரைன் நாட்டிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் கோரிக்கை படி உக்ரைன் நாட்டுப் பொருட்கள் மீது இருந்த கட்டுப்பாடுகள், தடைகள், வரி ஆகிய அனைத்தையும் நீக்கப்பட உள்ளதாகப் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் உக்ரைன் நாட்டின் பார்லி, தேன், டின்னில் பதப்படுத்தப்பட்ட தக்காளி மற்றும் கோழிக்கறி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு உதவும்.
பிரிட்டன்
ரஷ்யாவுக்கு எதிராக நடக்கும் இந்தப் போரில் நாங்கள் உக்ரைனுடன் துணை நிற்போம், மேலும் உக்ரைன் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக வளர்வதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளோம் எனப் பிரிட்டன் நாட்டின் சர்வதேச வர்த்தகச் செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெலியன் கூறினார்.
22 சதவீதம் வரி
உக்ரைன் நாட்டில் இருந்து பிரிட்டன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பொதுவாக 22 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், பிரிட்டன் நிலைப்பாட்டுக்கு உக்ரைன் இணைந்து செயல்படும் காரணத்தால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
ரஷ்யா மீது கூடுதல் தடை
மேலும் பிரிட்டன் அரசு ரஷ்ய நாணயம், கடல்சார் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம், எனர்ஜி தொடர்பான பொருட்களைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் பிரிட்டன் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கேவியர், வெள்ளி மற்றும் வைரங்கள் மீது கடுமையான தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.