கொரோனா தொற்றைத் தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதலே உலகளவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தில் அதிகளவிலான டிஜிட்டல் மற்றும் டெக் மேம்பாடுகளைக் கொண்டு வர துவங்கியுள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று வேகமாக வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிர்வாகப் பணிகளைத் திறம் படச் செய்ய இயந்திரங்கள் மற்றும் டெக் சேவைகள் சிறப்பான பலன்களை அளிக்கும் என்பதால் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்கள் டெக் சேவைகளைப் பெற துவங்கியுள்ளது.
இதனாலேயே இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தற்போது அதிகளவிலான ஐடி மற்றும் டெக் சேவை கிடைத்து வருகிறது.
பிரிட்டானியா
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பிஸ்கட் விற்பனை நிறுவனமான பிரிட்டானியா தனது டெக் சேவை மேம்பாட்டுக்கு இந்திய ஐடி நிறுவனங்களை நம்பாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளித்துள்ளது இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
டிஜிட்டல் மேம்பாடுகள்
பிஸ்கட் மற்றும் பேக்கரி நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தனது ஆப்ரேஷன்ஸ் பிரிவில் டிஜிட்டல் மேம்பாடுகளைச் செய்யவும், ஐடி ஆப்ரேஷன் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஐடி கண்சல்டிங் சேவை நிறுவனமான அக்சென்சர் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
வாடியா குழுமம்
வாடியா குழுமத்தின் மிக முக்கிய வர்த்தகப் பிரிவாக இருக்கும் பிரிட்டானியா, அக்சென்சர் உடனான கூட்டணி மூலம் தனது வர்த்தகத்தில் இருக்கும் அடிப்படை சேவை மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் மூலம் சந்தைக்கு ஏற்ப தனது வர்த்தகம் மற்றும் வர்த்தக முறைகளை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் எனப் பிரிட்டானியா தெரிவித்துள்ளது.
அக்சென்சர் உடனான கூட்டணி
அக்சென்சர் உடனான கூட்டணியில் பிரிட்டானியா தனது கொள்முதல் மற்றும் சப்ளை செயின் நிர்வாக முறைகளை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது. இதுமட்டும் அல்லாமல் புதிய வர்த்தகர்களை டிஜிட்டல் முறையிலேயே இணைப்பது, கான்டிராக்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையிலேயே செய்ய முடிவு செய்துள்ளது.
80 உற்பத்தி தளங்கள், 50 சரக்கு கிடங்கு
இப்புதிய மேம்பாடுகள் மூலம் பிரிட்டானியா நிறுவனத்தின் 80 உற்பத்தி தளங்கள் மற்றும் 50 சரக்கு கிடங்குகளை ஒன்றிணைத்து மேம்பட்ட முறையில் இணைக்கப்படுவது மட்டும் அல்லாமல் ஐடி ஆப்ரேஷன் செலவுகளைக் குறைக்க இப்புதிய மேம்பாடுகள் உதவும். இதன் மூலம் வர்த்தகத்தை வேகமாக வளர்ச்சி அடைய செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
129 வருடங்களாக இயங்கி வரும் இந்திய நிறுவனமான பிரிட்டானியா தனது ஐடி சேவை மேம்பாடுகளுக்காக இந்திய ஐடி சேவை நிறுவனங்களைச் தேர்வு செய்யாமல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அக்சென்சர் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது. ஐடி சேவை துறையில் வர்த்தகப் போட்டி மிகவும் அதிகம்.