பிரபலமான பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 23% அதிகரித்து, 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் இதன் லாபம் 403 கோடி ருபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஒருங்கிணைந்த விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகரித்து, 3,354 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,023 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு நிகரலாபம் 462 கோடி ரூபாயும், விற்பனை 3,161 கோடி ரூபாயாகவும் உள்ளது. இது குறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், பிரிட்டானியாவின் முழு அளவிலான தயாரிப்புகளை சந்தைக்கு பெற முடிந்தது. மேலும் பிரிட்டானியா விநியோகத்தில், செயல்திறனில் கவனம் செலுத்தியது.
பிரிட்டானியாவின் அனைத்து வணிகங்களும் சாதகமான ஆரோக்கியமான, இலாபகரமான வளர்ச்சியினை அளித்தன என்றும் வருண் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கமானது பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோரின் நடத்தை ஆகியவற்றில் பெரிய மாற்றத்தினை கொண்டு வந்துள்ளது. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட லாக்டவுனில் பல தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டிருந்தாலும், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது காலம் ஆகும் என்று தோன்றுகிறது.
மேலும் பிரிட்டானியாவின் மூலப்பொருட்கள் விலையில் மிதமான பணவீக்கத்தினை காண முடிந்தது. எனினும் பருவமழை மற்றும் அறுவடை குறித்த நேர்மறையான கண்ணோட்டத்தினைக் கருத்தில் கொண்டு, விலைகள் வரும் காலத்தில் நிலையானதாக இருக்கலாம் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
முந்தைய காலாண்டில் காணப்பட்ட செயல்திறனில் ஆதாயங்களில் பெரும்பகுதியை நாங்கள் தக்கவைத்துக் கொண்டோம். விநியோக சங்கிலி செயல்திறன் மற்றும் நிலையான செலவினங்கள், இந்த நடவடிக்கைகள் எங்கள் வணிகத்தின் வளர்ச்சியினைத் தக்க வைக்க உதவியது. இது கடந்த ஆண்டை விட செப்டம்பர் காலாண்டில் 390 அடிப்படை புள்ளிகள் லாபத்தினை அதிகரித்துக் கொள்ளவும் உதவியது.
இந்த நிறுவனம் மேக்ரோ பொருளாதாரம் குறித்த காரணிகளை நுணுக்கமாக கவனித்து வருகின்றது. இது நுகர்வோரின் திறனை மேம்படுத்துதல் மற்றும் மாறும் நிலைமைக்கு ஏற்ப நடுத்தர கால மூலோபாயத்தை வடிவமைத்து வருகிறது என்றும் பிரிட்டானியா கூறியுள்ளது.