அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிந்து வரும் நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்ட் படு வீழ்ச்சி அடைந்திருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தை கவனித்து வரும் வல்லுநர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் பவுண்ட் மிக மோசமாக சரிந்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் லிஸ் ட்ரஸ் அவர்கள் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பிரிட்டன் பவுண்ட்
அமெரிக்க டாலருக்கு எதிராக பவுண்ட் மதிப்பு 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மோசமான பொருளாதார கண்ணோட்டம் மற்றும் அமெரிக்க டாலர் வலிமை காரணமாக பிரிட்டன் பவுண்ட் பலவீனமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
40 ஆண்டுகள்
கடந்த 1985ஆம் ஆண்டு மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்தபோது பிரிட்டன் பவுண்ட் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் 40 ஆண்டுகள் கழித்து அதே நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் பவுண்ட் மதிப்பு
லண்டனில் நேற்றைய வர்த்தகத்தில் பிரிட்டன் பவுண்ட் $1.1407 என சரிந்தது. இது 37 ஆண்டுகளில் காணப்படாத நிலை என்றும், பிரிட்டனின் இருண்ட பொருளாதார நிலை எனவும் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
யூரோ-பவுண்ட்
அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமின்றி யூரோவிற்கு எதிராகவும் பிரிட்டன் பவுண்ட் நேற்று கிட்டத்தட்ட 1% குறைந்து 86.83 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லிஸ் ட்ரஸ் முதல் நடவடிக்கை
பிரிட்டன் பிரதமராக தேர்வாகியுள்ள லிஸ் ட்ரஸ் அவர்கள் பதவியேற்ற பின்னர் முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பவுண்ட் சரிவை குறைந்தபட்சம் தடுத்து நிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறைத்து மதிப்பிடக்கூடாது
பிரிட்டன் பவுண்ட் சரிவையும் அதனால் ஏற்படும் அபாயங்களையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று Deutsche Bank சமீபத்தில் எச்சரித்தது. எனவே முதலீட்டாளர்கள் இப்போது ட்ரஸ்ஸின் கொள்கை அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.