பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு வருவாய் ஈட்டவும், அரசு நிறுவனங்களில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளை விற்பனை செய்த உள்ளதாக அறிவித்தார். இதிலும் முக்கியமாக நாட்டு மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் எல்ஐசி நிறுவனப் பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்வதாக அறிவித்தார். இதற்கு மக்கள் தரப்பிலும், எல்ஐசி ஊழியர்கள் அமைப்பு தரப்பிலும் பெரிய அளவிலான எதிர்ப்பைத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டும் அல்லாமல் அரசு நிறுவனங்கள் தற்போது அதிகளவில் நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் அரசுக்கும் இந்நிறுவனங்கள் பெரும் சுமையாக மாறி வருகிறது எனவும் பொதுக் கருத்து நிலவுகிறது. சரி அப்படி எந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக நஷ்டத்தையும் அதிக லாபத்தையும் கொடுக்கிறது என்பதைப் பார்ப்போமா..?
பொதுத்துறை நிறுவன ஆய்வு
வருடாந்திர அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான ஆய்வு நடத்தப்படும் அதுதான் Public Enterprises Survey. எந்தெந்த பொதுத்துறை நிறுவனம் எவ்வளவு லாபம் அடைந்துள்ளது, நஷ்டம் அடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்வதே இந்தச் சர்வேயின் முக்கியமான நோக்கம். அந்த அடிப்படையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பொதுத்துறை நிறுவன ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதிக லாபம் தரும் நிறுவனங்கள்
இந்தியாவில் கிட்டதட்ட 100க்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது எல்லோருக்கும் தெரியும், அதில் 2018-19ஆம் நிதியாண்டில் அதிக லாபத்தை அடைந்திருப்பது ஒஎன்ஜிசி நிறுவனம் தான். அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த லாபத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மட்டும் சுமார் 15.3 சதவீத லாபத்தைக் கொடுக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் 9.68 சதவீதமும், என்டிபிசி 6.73 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.
நஷ்டம்
Public Enterprises Survey 2018-19-ன் படி பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் தான் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது, ஆனால் 2017-18ஆம் நிதியாண்டில் லாபத்தைத் தந்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, MSTC மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகி.ய நிறுவனங்கள் 2018-19ஆம் நிதியாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
மொத்த வருமானம்
2017-18ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 20,32,001 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளனர். இது 2018-19ஆம் நிதியாண்டில் 24,40,748 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகிட்டதட்ட 20.12 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவன எண்ணிக்கை
மார்ச் 31,2019இன் படி இந்தியாவில் சுமார் 348 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது, அதில் 249 நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதில் 86 நிறுவனங்கள் கட்டுமானத்திலும், 13 நிறுவனங்கள் மூடப்பட்டு அல்லது திவாலாகியுள்ளது.