டெல்லி: கடந்த சில வருடங்களாகவே தொலைத் தொடர்பு துறைக்கு போராட்ட காலம் தான். அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வந்ததிலிருந்தே கடும் நஷ்டத்தை கண்டன. அதிலும் அரசு பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின்னடைவையே சந்தித்தது.
எந்த அளவு எனில் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவு நஷ்டம் கண்டது.
ஒரு கட்டத்தில் இதையும் சமாளிக்க முடியாத இந்த நிறுவனம், தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அமலில் உள்ள விருப்ப ஓய்வூதிய திட்டம்
இந்த திட்டத்தின் படி, கடந்த சில வாரங்களாகவே விருப்ப ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இதன் படி கடந்த சில வாரங்களாக சுமார் 75,000 பேருக்கு மேல் விருப்ப ஓய்வு பெற விரும்புகின்றனர் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 1.5 லட்சம் பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் 77,000 பேர் இதை தேர்தெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 25 ஆன இன்று ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
விஆர்எஸ் வேண்டாம்
பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கள், ஊழியர்களின் விஆர் எஸ் பெறும் வயதை 50 ஆக குறைத்தது. ஆனால் ஊழியர்களே விருப்ப ஓய்வு திட்டத்தினை பெற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டமானது டிசம்பர் 3 வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இப்படியொரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. இவை ஜனவரி 31, 2020 முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
ஓய்வு பெறுபவர்களுக்கு பல சலுகை
இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுவதால் அவர்களுக்கு என்ன சலுகை, தன்னார்வ விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அரசு இந்த திட்டத்தின் கீழ் பல சலுகைகளை அறிவித்தது அரசு. ஊழியர்களுக்கு பணி முடித்த ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியமும், மீதமுள்ள பணிக்காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்கள் ஊதியமும் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் பி.எஸ்.என்.எல் அறிவுறுத்தியது.
செலவு மிச்சம்
ஏன் பணி புரியும் ஊழியர்களை இப்படி பி.எஸ்.என்.எல் அறிவுறுத்துகிறது. ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனம், இந்த தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினால் (BSNL Voluntary Retirement Scheme - 2019) 70,000 - 80,000 ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்பார்க்கிறது. இதன் படி இந்த நிறுவனத்திற்கு மாதம் 7000 கோடி ரூபாய் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே அரசு இந்த திட்டத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
மறுமலர்ச்சி திட்டம்
இதனால் கடந்த மாதத்தில் அரசு அறிவித்த இணைப்பு நடவடிக்கைகளையும், இந்த தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தாலும், நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு இது ஒரு புத்துயிரூட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு தேவையான நிதியினை மத்திய அரசு வழங்கும் என்றும் கடந்த மாதமே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படி பிரச்சனை கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி சேவையை ஊக்கப்படுத்த திட்டம்
மேலும் இந்த திட்டத்தின் மூலம் 4ஜி சேவைகளையும் ஊக்கப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம் பின் தங்கியிருப்பது, இந்த நிறுவனத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் இதிலிருந்து எப்படி மீண்டு வரும் என்று பொறுத்திறுந்து தான் பார்க்க வேண்டும்.