மத்திய அரசின் கீழ் இயங்கும் BSNL டெலிகாம் நிறுவனத்துக்கு, ஒரு பெரிய தொகை கொடுத்து உதவ முன் வந்து இருக்கிறது அரசு தரப்பு.
இந்த உதவியைப் பயன்படுத்தி, முதலில் BSNL நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க இருக்கிறார்கள். BSNL நிறுவனத்தில் சுமார் 36,000 பேர் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் ஓய்வு பெற்று வெளியேற இருக்கிறார்களாம்.
அதற்கு அடுத்த வேலையாக சுமார் 12,000 கோடி ரூபாய் செலவழித்து நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவைகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறார்களாம். இந்த செய்தியை BSNL நிறுவனத்தின் தலைவர் ப்ரவீன் குமாரே உறுதி செய்து இருக்கிறார்.
எப்போது
முதலில் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவையை வழங்க தகுந்த இடங்களை தேர்வு செய்ய இருக்கிறார்களாம். அதன் பிறகு அலைவரிசை சேவைகளை வழங்கும் இயந்திரங்களை மேம்படுத்த இருக்கிறார்களாம். இதற்கு எல்லாம் டெண்டர் வழியாகத் தான் வேலைகளைச் செய்ய இருக்கிறார்களாம். எனவே சுமாராக ஆறு மாதங்களாவது ஆகும் என்கிறார் ப்ரவீன் குமார்.
ஒரே நேரத்திலா
BSNL நிறுவனம் சுமார் 12,000 கோடி ரூபாயை செலவழித்து நான்காம் தலைமுறை அலைவரிசை சேவையை வழங்க இருப்பதாகச் சொன்னார். ஆனால் இந்த 12,000 கோடி ரூபாயை ஒரே அடியாக செலவழிக்காமல், அடுத்த 24 மாதங்களில் பகுதி பகுதியாக செலவழிக்கப் போகிறார்களாம். எனவே வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக நடக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் BSNL தலைவர்.
போதாது
அதோடு, விருப்ப ஓய்வு எடுத்து இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் BSNL தலைவர் ப்ரவீன் குமார். தற்போது 36,000 ஊழியர்கள் மட்டுமே விருப்ப ஓய்வு எடுத்து இருக்கிறார்கள். ஆனால் சுமார் 70,000 - 80,000பேராவது இந்த விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்களாம். அவ்வளவு ஏன்...? குரூப் ஏ அதிகாரிகளிலேயே 3,000 பேர் வரை விருப்ப ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கிறார்களாம்.
மீதி பணம்
மத்திய அரசு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து, BSNL நிறுவனத்தை மீட்க இருக்கிறார்கள். ஆனால் மற்ற செயல்பாடுகளுக்கு BSNL தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 14 அதிக மதிப்புள்ள நிலங்களையும், நில வங்கிகளையும் BSNL நிறுவனம் விற்க இருக்கிறதாம். இதனால் சுமாராக 8,000 ரூபாய் நிதி திரட்ட முடியும் எனவும் சொல்லி இருக்கிறார் BSNL தலைவர்.