பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பெரும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெருகி வரும் நஷ்டத்தினை குறைக்கவும், நிறுவனத்தை மேம்படுத்தவும், இந்த நிறுவனம் மத்திய அரசின் ஒப்புதலோடு வி.ஆர்.எஸ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு 78,569 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
இந்த விருப்ப ஓய்வு திட்டத்தால் 2020ம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1,300 கோடி ரூபாய் ஊதிய செலவுகள் மிச்சமாகும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
செலவு குறையும்
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருப்ப ஓய்வுக்காக கிட்டதட்ட 79,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஜனவரி 31 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதால், இதன் மூலம் பிஎஸ்என்எல்-லுக்கு 1,300 கோடி ரூபாய் வரை ஊதிய செலவை மிச்சப்படுத்த முடியும். மேலும் இதரபடிகள், ஊதியம் என வழங்கும் இந்த தொகையினை சேமிக்க முடியும் என்றும் பிஎஸ்என்எல் தலைவர் பிகே புர்வார் தெரிவித்துள்ளார்.
இணைப்பு நடவடிக்கை
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை புத்துயிர் கொடுக்கும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் விஆர் எஸ் திட்டம் பெரும் அளவில் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை எம்.டி.என்.எல். நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேவைகளை இன்னும் மேம்படுத்த முடியும் என்றும் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4ஜி சேவை வழங்க திட்டம்
தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-லில் இப்படி சேவை இல்லாததே நஷ்டத்திற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரமைக்கும் விதமாக அரசு 4 ஜி சேவையை வழங்க தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
விருப்ப ஓய்வு திட்டம்
அரசின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான விருப்ப ஓய்வு திட்டமானது கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1.53 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பாதிபேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தில் மட்டும் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
என்ன சலுகை
இவ்வாறு அரசின் கோரிக்கையை ஏற்று விருப்ப ஓய்வுக்கு விண்ணபித்தவர்களுக்கு, இதுவரை பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஓர் ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் வீதமும், மீதமுள்ள பணி ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கு 25 நாட்கள் வீதமும் ஊதியம் வழங்கப்படும் என்றும் முன்னரே கூறப்பட்டுள்ளது.