இந்தியாவின் போட்டி மிகுந்த டெலிகாம் துறையில் நிதிநெருக்கடி மற்றும் வர்த்தகச் சரிவால் திண்டாடும் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் லாபகரமான நிறுவனமாக மாறப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், நிதி நிலையை மேம்படுத்தப் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் நிர்வாகம்.
ஏற்கனவே பிஎஸ்என்எல் நிர்வாகம் 30,000-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 20,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு டெலிகாம் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய டெலிகாம் துறையில் அரசு டெலிகாம் நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் நிலையில், இந்த நிலையை மாற்ற மத்திய அரசு இவ்விரு நிறுவனங்களை மீட்டெடுக்க 69,000 கோடி ரூபாய் அளவிலான தொகை கடந்த 2019 ஆக்டோபர் மாதம் ஒதுக்கிடு செய்தது.
திட்டம்
இந்த நிதி ஒதுக்கீடு பின்பு அரசு டெலிகாம் நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைத்து, தேவையற்ற சொத்து மற்றும் உடைமைகளை விற்பனை செய்து, ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுக்கப்பட்டு நிதி நிலையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின் படி அடுத்த 2 வருடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபகரமான நிறுவனமாக மாறும்.
செப்டம்பர் 1
இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்துத் தலைமை பொது மேலாளர்களும் செலவுகளைக் குறைக்கவும், நிதி நிதிநிலையை மேம்படுத்தவும் கான்டிராக்ட் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், கான்டிராக்ட் ஊழியர்களின் பயன்பாட்டையும் குறைக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஊழியர்கள் அமைப்பு
பிஎஸ்என்எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் புதிதாக 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனப் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பிஎஸ்என்எல் நிர்வாகம் சுமார் 30,000 கான்டிராக்ட் மற்றும் இதர ஊழியர்களுக்குக் கிட்டதட்ட 1 வருடத்திற்கான சம்பளத்தைக் கொடுக்காமல் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவின் மூலம் புதிதாக 20,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். எனவே இந்த முடிவை பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனே திரும்பப் பெற வேண்டும் எனப் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சேவை
ஏற்கனவே VRS மற்றும் கான்டிராக்ட் ஊழியர்கள் 30,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பல நகரங்களில் பிஎஸ்என்எல்-ன் சேவை தரம் மேசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது மீண்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மேலும் மோசம் அடையும் எனவும் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications