மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும் 7,441.11 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்ட அளவு 15,499.58 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நஷ்ட அளவீடு குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம் ஊழியர்களுக்கு ஓய்வு அளித்தது தான்.
பிஎஸ்என்எல் நிர்வாகம் கடந்த ஆண்டுச் சுமார் 78,569 ஊழியர்களை ஓய்வு அளித்துப் பணியில் இருந்து நீக்கியது. இதன் வாயிலாகப் பெருமளவிலான தொகையைச் சம்பளத்தின் வாயிலாகக் குறைத்து நஷ்ட அளவீட்டைக் குறைத்துள்ளது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல்.
மார்ச் 31, 2021 உடன் முடிந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டை விடவும் 1.6 சதவீதம் சரிந்து 18,595.12 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மேலும் இதே நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த மதிப்பும் 51,686.8 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் மொத்த கடன் இக்காலகட்டத்தில் 21,674.74 கோடி ரூபாயில் இருந்து 27,033.6 கோடி ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.