இந்தியாவில் டெலிகாம் சேவையின் தரமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் டெலிகாம் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி எனத் தனது தொழில்நுட்பத்தை வேகமாக மேம்படுத்தி அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் நிறுவனமான 4ஜி சேவை அளிக்காது கவலை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. இதற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளதாகத் தெரிகிறது.
பிஎஸ்என்எல்
அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா புதன்கிழமை மக்களவையில் தெரிவித்தார். இந்திய மக்களுக்கு 4ஜி டெலிகாம் சேவையை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறை
இதேபோல் இந்திய ரயில்வே துறையும் தனது சேவைகளையும், சேவை தரத்தையும் மேம்படுத்தி வரும் நிலையில், ரயில்களிலும் இண்டர்நெட் சேவை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதில் இருக்கும் பிரச்சனை என்ன என்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா விளக்கம் கொடுத்துள்ளார்.
5ஜி நெட்வொர்க்
மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களில் 4ஜி தொழில்நுட்பம் மூலம் தொடர்பு தடைப்படுவதால், 5ஜி நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டால் மட்டுமே ரயில்களுக்குள் இடைவிடாத இணைய இணைப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
1.12 லட்சம் டவர்கள்
பிஎஸ்என்எல் மூலம் நாடு முழுவதும் 4G நெட்வொர்க் அளிக்க வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக நாட்டின் முக்கியமான பகுதிகளில் 6,000 டவர்களை உடனடியாகவும், அடுத்தச் சில காலத்தில் கூடுதலான 6,000 டவர்களையும் நிறுவி அதைத் தொடர்ந்து இறுதியாக 1 லட்சத்தை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்
இதேவேளையில் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாகவே மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரம்-க்கான விலையை நிர்ணயம் செய்யும் பணிகளைத் துவங்கியுள்ள நிலையில் விரைவில் ஏலம் விடுவதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.