மத்திய அரசு வரலாறு காணாத அளவுக்கு தன் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சொத்து பத்துக்களை விற்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இப்படி, மத்திய அரசு தன் நிறுவனங்கள் மற்றும் சொத்து பத்துக்களை விற்பது சரியா..?
இப்படி விற்பதால் அரசுக்கு என்ன சிக்கல் வரும். ஏன் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் சொத்து பத்துக்களை அதிகம் விற்கக் கூடாது என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
Disinvestment என்றால் என்ன
அரசு தன்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்று பணத்தைப் பெறுவது தான் Disinvestment. அரசிடம் இருக்கும் சொத்துக்கள் என்ன.?
அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள், உதாரணம்: எல் ஐ சி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா.
அரசு முதலீடு செய்து வைத்திருக்கும் நிறுவன பங்குகள் போன்றவைகளைச் சொல்லலாம்.
விற்பனை
இப்போது பெரும்பாலும் விஷயம் புரிந்து இருக்குமே..! அதே தான் அரசு தன்னிடம் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சொத்து பத்துக்களை விற்று அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் 2,10,000 கோடி ரூபாயைத் திரட்ட இருக்கிறது. மத்திய அரசின் கீழ் இருக்கும் நிறுவனத்தை மத்திய அரசு விற்கிறது இதில் என்ன பிரச்சனை..? என்று கேட்கிறீர்களா..? முதலீட்டு வருமானம் அடி வாங்கும்.
முதலீட்டு வருமானம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஆர்பிஐ, எல் ஐ சி, பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், மத்திய அரசுக்கு ஈவுத் தொகை என்கிற பெயரில் சுமாராக 1.,13,420 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டில், சுமாராக 1,99,892 கோடி ரூபாயை, பொதுத் துறை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கலாம் என பட்ஜெட்டிலேயே சொல்லி இருக்கிறார்கள்.
குறைவு
அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் மத்திய அரசின் கீழ் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக சுமார் 1,55,395 கோடி ரூபாய் தான் வரலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். இன்னும் முழுமையாக பொதுத் துறை நிறுவனங்களை விற்கவே இல்லை. ஆனால் அதற்குள் 2019 - 20 & 2020 - 21 நிதி ஆண்டுக்கு இடையில் சுமார் 40,000 கோடி வருவாய் சரிந்து விட்டது.
வட்டி & முதலீட்டு வருமானங்கள்
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில், அரசு அமைப்புகளே, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கார்ப்பரேட் டெபாசிட், வங்கி டெபாசிட் என காலத்துக்கு தகுந்தாற் போல நல்ல முதலீடுகளைத் தேர்வு செய்து தங்கள் பணத்தை இன்வெஸ்ட் செய்து வருகிறார்கள். இப்படி வரி அல்லாத வருமானம் நன்றாக வருவதால், மற்ற வரி வருமானங்களை ஆக்கப் பூர்வமாக மற்ற வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு முறை லாபம்
இப்போது, மத்திய அரசு தன் நிதி நிலை சார்ந்த பிரச்னையை சரி செய்ய, பொதுத் துறை நிறுவனங்களையோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையோ பெரிய அளவில் விற்றுவிட்டால், நாளை இது போல நிறுவனங்களிடம் இருந்து வரும் வருவாய் பெரிய அளவில் வராது.
வருவாய் காலி
இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசுக்கு முதலீடு செய்து வரும் வருவாய் மிகவும் குறைந்துவிடும். நிலையாக ஓரிடத்தில் இருந்து வருமானம் வந்தால் தானே நிம்மதியாக ஆட்சி செய்ய முடியும். இப்போதே எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் விற்றுவிட்டால் நாளை எங்கிருந்து வருமானம் வரும்..?
குட்டி கணக்கு
உதாரணம்: கோல் இந்தியா, இதில் மத்திய அரசு இன்று வரை 69 % பங்குகளை வைத்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 2019-ல் மத்திய அரசுக்கு கோல் இந்தியா சுமாராக 5,500 கோடி ரூபாய் ஈவுத் தொகையாக கொடுத்து இருக்கிறார்கள். தற்போது, கோல் இந்தியாவின் பங்குகளை 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விற்றுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
பொன் முட்டை இடும் வாத்து
கோல் இந்தியா மூலம், 20 ஆண்டுகளில் (ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய்) மத்திய அரசுக்கு வர வேண்டிய பணத்தை ஒரே அடியாக விற்று அள்ளிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, கோல் இந்தியா, மத்திய அரசுக்கு 5,000 கோடி ரூபாய் கொடுக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அந்த நல்ல வாய்ப்பை, வலியில்லாமல் எளிமையாக வருமானம் வருவதை, மத்திய அரசு இப்போதே விற்பனை செய்வதால், தடுத்துவிட்டது என்று தான் இங்கு பார்க்க வேண்டி இருக்கிறது.
ஆலோசிக்கனும்
ஆக, நல்ல பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு உண்மையாகவே பொன் முட்டையிடும் வாத்துக்கள் தான். எனவே மத்திய அரசு, தன் பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் முடிவை தீர ஆலோசித்தால் நல்லது. மத்திய அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தன் கீழ் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பங்கு முதலீடுகளை விற்று எவ்வளவு பணத்தைத் திரட்டி இருக்கிறார்கள் என்கிற அட்டவணையைக் கொடுத்து இருக்கிறோம்.
ஐந்து ஆண்டுகள் மட்டும்
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாகத் தான் Disinvestment-ஐ தனியாகக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதற்கு முன்பு Capital Receipts என்கிற தலைப்பில் other Receipts என்கிற பிரிவில் கொடுத்து இருக்கிறார்கள். தனியாக கொடுத்த இந்த ஐந்து ஆண்டு வரலாற்றிலேயே, 2020 - 21 நிதி ஆண்டுக்கு நிர்ணயித்து இருக்கும் 2,10,000 கோடி தான் மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் துறை நிறுவனங்கள் & சொத்து பத்துக்களை விற்று மத்திய அரசு திரட்ட நிர்ணயித்து இருக்கும் இலக்கு மற்றும் கடந்த காலங்களில் திரட்டிய பணம் | ||
---|---|---|
நிதி ஆண்டு | திரட்டிய பணம் | |
2020-2021 | 2,10,000 * | |
2019-2020 | 1,05,000 * | |
2018-2019 | 94,726 | |
2017-2018 | 100,045 | |
2016-2017 | 47,743 | |
* - திரட்ட நிர்ணயித்து இருக்கும் இலக்கு. | ||
2016 - 17-க்கு முன் Disinvestment தனியாக குறிப்பிடவில்லை. |