Recommended Video
ஒருவழியாக, நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டார்.
நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என அமர்க்களமாக அறிவித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்த 2020 - 21 பட்ஜெட்டின் மொத்த வருவாய் மற்றும் செலவுகள் விவரங்களும் அரசு வலைதளத்தில் அப்லோட் செய்துவிட்டார்கள்.
இப்போது மத்திய் அரசின் மொத்த வருவாய் மற்றும் செலவுகளைத் தான் பார்க்கப் போகிறோம்.
செலவுகள்
நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மொத்தம் 30.42 லட்சம் கோடி ரூபாயை செலவழிக்க இருக்கிறார்களாம். இந்த செலவுகளைச் செய்ய, அரசுக்கு எங்கு இருந்து பணம் வர இருக்கிறது..? அரசின் மொத்த வருவாய் கணக்குகள் என்ன..? என ஒரு கேள்வி எழுகிறது.
வருவாய்
இந்தியாவின் மத்திய அரசு வரும் 2020 - 21 நிதி ஆண்டில் மொத்தம் 22.45 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக வசூலிக்கப் போகிறார்களாம்.16.35 லட்சம்கோடி ரூபாய் வரி வருவாயாகவும், 3.85 லட்சம் கோடி ரூபாய் வரி அல்லாத வருவாயாகவும் வசூலிக்க இருக்கிறார்களாம்.
கேப்பிட்டல் ரெசிப்ட்ஸ்
இந்தியாவின் மத்திய அரசு, அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில், மற்றவர்களுக்கு கொடுத்து இருக்கும் கடனை வசூலிப்பதின் வழியாக 14,967 கோடி ரூபாயும், டிஸ்ன்வெஸ்ட்மெண்ட் (Disinvestment) முறையில் 2.10 லட்சம் கோடி ரூபாயும் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். வசூலிக்க முடியுமா என்பது தான் கேள்வி.
முரட்டுக் கடன்
மேலே சொன்ன விவரங்களைக் கூட்டிப் பார்த்தால் (16.35+3.85+0.14+2.1) = 22.4 லட்சம் கோடி தானே வருகிறது? மீதிப் பணம் எங்கிருந்து வரப் போகிறது என்று கேட்டால் பதில் கடன். ஆம் மீதமுள்ள 7.96 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கி செலவழிக்க இருக்கிறது மத்திய அரசு.
சிக்கலான செலவுகள்
சரி கடன் வாங்கி செலவு செய்து விடலாம். ஆனால், இதற்கு முன்பே வாங்கிய கடன்களுக்கு எல்லாம் வட்டி கட்ட வேண்டாமா..? எனக் கேட்டால். ஆமாங்க வட்டி கட்டணும். 2020 - 21 நிதி ஆண்டுக்கு 7.08 லட்சம் கோடி ரூபாயை, இதற்கு முன்பு வாங்கிய கடன்களுக்கு வட்டியாக மட்டும் செலுத்தப் போகிறார்களாம்.
சுருக்கம்
ஆக 7.96 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு, அதில் 7.08 லட்சம் கோடி ரூபாயை இதற்கு முன்பு வாங்கிய கடனுக்கு வட்டியாகச் செலுத்தப் போகிறார்கள். ஆக மத்திய அரசு தான் செய்யப் போகும் மொத்த செலவில் 26 ரூபாயை கடனாக வாங்கி செலவு செய்ய இருக்கிறது.