கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தம், கொரோனா என பலவும் ஆட்டோமொபைல் துறையினரை ஆட்டிப்படைத்து வருகின்றது. அவ்வப்போது விழாக்கால பருவத்தில் ஏற்றம் கண்டாலும், மீண்டும் சரிவினை நோக்கியே சென்று கொண்டுள்ளது.
இப்படி ஒரு நிலையில் தான், வாகனத்துறையும் கடந்த சில பட்ஜெட்களாகவே, பல வேண்டுகோள்களை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றது.
ஆனால் இதுவரையில் பட்ஜெட்டில் அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் தான், இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் பட்ஜெட்டில் ஆவது, வாகனதுறைக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்குமா? வீழ்ச்சி கண்டுள்ள வாகன துறையை எழுந்து நிற்க போதிய அறிவிப்புகள் வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
வரி மிக அதிகம்
இதற்கிடையில் டைம்லர் இந்தியாவின் எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சத்தியகம் ஆர்யா, இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கான வரி விகிதம் மிக அதிகம். அது குறைக்கப்பட வேண்டும். அரசு மிக கடினமான காலகட்டத்தில் உள்ளது. ஆனால் நடுத்தர காலகட்டத்தில் மற்றும் நீண்டகால நோக்கில் அரசு வரி விகிதத்தினை மாற்றியமைக்க வேண்டும்.
வாகன துறையை மீட்டெடுக்க திட்டங்கள்
வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர்செய்யும் வகையில், திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்பதே வாகன உற்பத்தி நிறுவனங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன. இது போன்ற எதிர்பார்ப்புகள் கடந்த ஆண்டில் இருந்த பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டாவது போதிய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஸ்கிராப்பேஜ் பாலிசி
தற்போது சில கார்கள், வர்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என பலவற்றிற்கும் 28% வரி வசூலிக்கப்படுகிறது. இது மிக அதிகம். ஆக அரசு இதனை குறைக்க வேண்டும். அதோடு வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசியை அரசு விரைவில் அமல்படுத்தப்படுத்த வேண்டும். இது தேவையை மிக அதிகமாக ஊக்குவிக்கும் என்றும் ஆர்யா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் பெருத்த அடி
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனங்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை. இது ஆட்டோமொபைல் துறையினரின் முதுகெலும்பையே உடைத்து விட்டது. கடைசியாக இது விழாக்காலங்களான அக்டோபர் நவம்பரில் தான் விற்பனையே அதிகரித்தது. இதே மதர்சன் இந்தியா குழுமம் அரசு, ஆட்டோமொபைல் துறையை மீட்க அரசு சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.