பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த சில வாரத்தில் நாடாளுமன்றத்தில் 2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்ய உள்ளது. இந்திய வரலாற்றில் எந்த ஒரு அரசும், எந்த ஒரு நிதியமைச்சரும் சந்திக்காத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் பட்ஜெட் அறிக்கையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் அறிக்கையை உருவாக்குவதற்கான தரவுகளைச் சேகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், இந்த வருட பட்ஜெட்-ல் வருமான வரியில் தளர்வு இருக்குமா என்ற மிக முக்கியமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்துகொள்வதற்கு முன் நாட்டின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இந்தியாவும் கொரோனாவும்
நடப்பு நிதியாண்டின் துவக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டின் உற்பத்தி, சேவைத் துறைகள் முழுமையாக முடங்கி வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது.
இந்த வீழ்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது இந்தியப் பொருளாதாரம்.
இந்திய பொருளாதாரம்
இதன் எதிரொலியாக நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் -24 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது, இதன் பின் 2வது காலாண்டில் -7.5 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் ரீடைல் பணவீக்கம் பல மாதங்களாக 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதேபோல் 2வது காலாண்டு முடிவிலும் இந்திய வேலைவாய்ப்பு சந்தை அளவீடு 38 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை
2020-21ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டின் நிதி பற்றாக்குறை அளவு ஜிடிபியில் 12- 13 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு
2020-21ஆம் நிதியாண்டின் 2வது அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றாலும் இந்த ஆண்டு இந்திய அதிகப்படியாக -7.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே அடையும்.
இதேபோல் 2021-22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 15 முதல் 16 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிப்புகள் உள்ளது
கடன் சுமை குறைக்க வேண்டும்
இதேவேளையில் 2017-18 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 5 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 12- 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தனது கடன் அளவை பெரிய அளவில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முக்கியப் பாதிப்புகள் ( வருமான வரி)
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்ட செல்ல 2019-20 நிதியாண்டை விடவும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும், இதேபோல் நிதிப் பற்றாக்குறையை 5 சதவீதம் என்ற அளவீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த இரண்டு இலக்கையும் அடைய வேண்டும் என்றால் 4 முக்கியமான விஷயங்களில் மாற்றம் ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது.
1. தனிநபர் வருமான வரித் தளர்வு அளவீட்டைக் குறைக்கப்படும்.
2. ஒரு முறை ஒரு வருடம் என்ற முறையில் கார்பரேட் வரி மீது சர்சார்ஜ் விதிக்கப்படும்.
3. அனைத்து துறையிலும் அரசின் சேவை கட்டணங்கள், வாடிக்கையாளர் கட்டணங்களில் உயர்வு.
4. அரசு கையிருப்பில் இருக்கும் நிலங்களைத் தொழிற்துறை வளர்ச்சிக்காக விற்பனை செய்ய வேண்டும்.
வருமான வரித் தளர்வு
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது வருமான வரி குறைக்கப்படுவதற்குச் சாத்தியமில்லை என்பது தெரிகிறது. ஆனால் மத்திய நிதியமைச்சர் மக்களுக்குத் தனது பட்ஜெட் அறிக்கையில் சர்ப்ரைஸ் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 1, 2021 வரை காத்திருப்போம்..!