இன்றைய காலகட்டத்தில் இந்தியா சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நிதிப்பற்றாக்குறை. ஏனெனில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட் இலக்கையும் தாண்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா பரவலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு தான். எனினும் இதனால் வரவிருக்கும் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்துமே என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பல துறைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறையலாம்? சலுகைகள் அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு தழுவிய லாக்டவுன் என்பது அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசியம் தவிர அனைத்து தொழில்துறைகளும் முடங்கின. இதனால் பொருளாதாரம் கடுமையான சரிவினை சந்தித்தது. பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்தனர்.
தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், தொழில்துறைகள் முழுமையாக சரிவிலிருந்து மீளவில்லை. இதற்கிடையில் இரண்டாம் கட்ட பரவல் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் வந்தால் என்னவாகுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்து விட்டது.
இதற்கிடையில் மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான இக்ரா, மத்திய மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறை பற்றி எச்சரித்துள்ளது. அதோடு அடுத்த நிதியாண்டில் 5% நிதிப்பாற்றக்குறை இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதோடு நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிபற்றாக்குறை 7.5% ஆகவும், இதே மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறையானது 12.2% ஆகவும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆக நிதி பற்றாக்குறை சரிவினை அரசு தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பலவீனமான மீட்சியைத் தூண்டும். மேலும் வருவாயை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் இது நெருக்கடியை கொடுக்கும் என்றும் தனது அறிக்கையில் இக்ரா தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நிறுவனம் 2021 - 22ம் நிதியாண்டில் அரசின் பொது நிதிபற்றாக்குறையானது 8.5% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. அதாவது மத்திய அரசின் நிதிபற்றாக்குறையானது 5% ஆகவும், இதே மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறையானது 3.5% ஆகவும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது நிகர மற்றும் மொத்த சந்தை கடன் முறையே 16 லட்சம் கோடி மற்றும் 20.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. அதோடு மையத்தின் மொத்தக் கடன் மார்ச் 2020 மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 49.3%ல் இருந்து, 2021 மார்ச்சில் 59% ஆக அதிகரிக்கலாம் என்று கணித்துள்ளது. இதே மார்ச் 2022ல் 57% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 3.5 சதவீதம், அதாவது, 7.96 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பற்றாக்குறை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் கிடைக்குமா? தொழில்துறைகளுக்கு சலுகை அறிவிப்புகள் வருமா? இன்னும் பல துறையினரும் சலுகைகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? அரசு என்ன செய்யபோகிறது? சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.