ஏழைகளின் உலோகம் என்று அழைக்கப்படும் அலுமினியம், இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு உலோகமாகும். இது வெறும் வீட்டில் பயன்படுத்தப்படும் உலோகம் மட்டும் அல்ல, உருக்கு பயன்பாடு மற்றும் மோட்டார் வாகன துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகையான உலோகமாகும்.
அப்படிப்பட்ட ஒரு உலோகத்தினை இந்தியா, ஏற்றுமதி இறக்குமதி என இரண்டையும் செய்கிறது.
ஆனால் சமீப காலமாக இத்துறையில் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. அதுவும் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றது.
அலுமினிய துறையில் எதிர்பார்ப்பு
அதிகளவிலான இறக்குமதி காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகார்களும் சமீப காலமாகவே அதிகரித்து வருகின்றது. ஆக அதிகளவிலான, குறைந்த விலையில் இவ்வாறு அலுமினியம் ஸ்கிராப்களை இறக்குமதி செய்வதை தடுக்கவும், அடிப்படை சுங்க வரிக் கட்டணத்தினை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
அலுமினியம் அசோசியேஷன் எதிர்பார்ப்பு
உண்மையில் குறைந்த விலையில் அதிகளவிலான இறக்குமதிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பெரும் அச்சுறுத்தி வருகின்றது. அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் 2021 - 22ல் இந்திய அலுமினியம் அசோசியேஷன் அமைப்பு, இத்துறையை ஆதரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
நிலக்கரிக்கான செஸ் வரியை நீக்க வேண்டும்
இது அலுமினியம் மட்டும் அல்ல, காப்பர், ஜிங்க், லெட், நிக்கல் உள்ளிட்ட உலோகங்களுக்கும், இந்த அடிப்படை சுங்க வரியை அதிகரிக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதோடு அலிமினியம் போன்ற அதிக சக்தி வாய்ந்த துறைகளை ஆதரிப்பதற்காக நிலக்கரிக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இது மேற்கொண்டு இந்த துறையை ஊக்குவிக்கும் என இந்த துறையினர் கூறுகின்றனர்.
இதற்கு வரியை குறைக்க வேண்டும்
இந்திய அலுமினிய துறையானது அதிகளவிலான இறக்குமதியால் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளது. ஒரு பக்கம் அதிக இறக்குமதி, மறுபக்கம் உற்பத்தி குறைப்பு, மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, தளவாட செலவுகள் என அனைத்தும் இத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆக மூலதன பொருட்கள் இறக்குமதி மீதான வரியை திரும்ப பெறுவதனையும் இந்த துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கோரிக்கை நிறைவேறுமா?
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. அதோடு அலுமினிய துறை நாட்டின் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும், ஆத்மா நிர்பார் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு எரிசக்தி பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, மின்மயமாக்கல், விண்வெளி, ஆட்டோமொபைல், நீடித்த நுகர்வோர் பொருகள், பேக்கேஜிங் போன்ற பல துறைகளில் அலுமினியம் பயன்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக இத்துறையினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.