2020ஆம் ஆண்டில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகள் மிகவும் மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்த மாபெரும் சரிவில் இருந்து மீண்டு வர தற்போது அமெரிக்கா சுமார் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதேபோல் பிரிட்டன் பல விதமான கட்டுப்பாடுகளுடன் பொருளாதாரம், வர்த்தகச் சந்தை, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பல ஊக்கத் திட்டங்களையும், நிதியுதவியையும் அளித்து வருகிறது.
இந்நிலையில் டாப் 10 பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தை, கொரோனா மருந்துக்கான நிதியுதவி, உற்பத்தித் துறையை மேம்படுத்துதல், சேவைத் துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருத்தல் என அதிகளவிலான சவால்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வருகிற 2021 பிப்ரவரி 1ஆம் தேதி 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
கடும் சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களின் (A-Team) குழுவில் யாரெல்லாம் உள்ளார்கள்.
நிர்மலா சீதாராமன்
2021 பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்க மத்திய நிதியமைச்சகம் 6 பேர் கொண்ட அணியை உருவாக்கியுள்ளது. இந்த 6 பேர் கொண்டு அணிக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைவராக உள்ளார்.
அஜய் பூஷன் பாண்டே
மத்திய நிதியியல் செயலாளரான அஜய் பூஷன் பாண்டே, நிர்மலா சீதாராமன் அவர்களின் 6 பேர் கொண்ட அணியின் முக்கிய உறுப்பினராக உள்ளார். இவரது தலைமையில் தான் ஆதார் கார்டு சேவை மேம்படுத்தல், வருவாய் கொள்கை உருவாக்குதல் போன்ற முக்கியமான பணிகள் மோடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. இவர் வருவாய்த் துறை செயலாளராக இருந்த போது தான் இந்தியாவில் கார்பரேட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் காரணத்தால் கடந்த 2 வருடமாகக் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் கணிப்புகளை விடவும் குறைவாக இருந்தது.
தருண் பஜாஜ்
31 வருடங்களாக நிர்வாகம், பொதுப்பணித் துறை, நிதியியல் மற்றும் தொழிற்துறையில் பணியாற்றியவர் தருண் பஜாஜ். நிதியமைச்சகத்திற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியவர் தருண் பஜாஜ்.
இவர் பொருளாதார விவகாரத்துறை செயலாளராகப் பணியாற்ற துவங்கிய பின் இந்தியாவின் கடன் திட்டத்தை 12 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்த்தினார்.
டிவி சோம்நாத்
செலவின செயலாளரான டிவி சோம்நாத் பட்ஜெட் தயாரிக்கும் அணியில் முக்கிய உறுப்பினராக உள்ளார். நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய அதேவேளையில் நாட்டின் வளர்ச்சிக்கு நிதி பயன்பாடு எவ்விதமான தடையும் இருக்கக் கூடாது என்ற முக்கியமான கடமை இவரின் கையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் முடிவில் தான் இல்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
டெபாஷிஷ் பாண்டா
வங்கித்துறை செயலாளர் டெபாஷிஷ் பாண்டா பட்ஜெட் அணியில் முக்கிய உறுப்பினராக இடம்பெற்று உள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளைத் தேர்வு செய்து பாதிப்பு அடைந்த தத்தம் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு Emergency Credit Line Guarantee திட்டம் மூலம் நிதியுதவியை அளிக்கும் திட்டத்தில் இவரின் பங்கு மிகவும் அதிகம்.
யெஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வாங்கிகளுக்குக் குறுகிய காலகட்டத்தில் சரியான முடிவுகளை எடுத்துத் திறம்பட இவ்வங்கிகள் காப்பாற்றப்பட்டது இவரது தலைமையில் தான். டெபாஷிஷ் பாண்டாவும் பட்ஜெட் அணியில் இடம்பெற்று உள்ளார்.
டிகே பாண்டே
அரசு சொத்துகள், பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியியல் திட்டத்தில் மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. இந்த முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்தும் DIPAM அமைப்பின் செயலாளர் தான் டிகே பாண்டே. இவரும் பட்ஜெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
கேவி சும்பிரமணியன்
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சும்பிரமணியன் பட்ஜெட் அறிக்கையை உருவாக்கப்படும் அணியின் மிகவும் முக்கியமான அதிகாரியாக விளங்குகிறார்.