வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று 2021ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையினரிடம் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
ஏனெனில் கொரோனாவின் காரணமாக மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையானது பின்னடைவிலேயே உள்ளது.
முன்னதாக பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் துறையானது, கடந்த ஆண்டில் கொரோனாவால் முடங்கி போனது. இந்த துறையின் வணிகம் பல மாதங்களாக மிக மோசமான சரிவினையே கண்டு வருகின்றது.
ஆக இந்த துறையினை மீட்டெடுக்க சலுகைகள் இருக்குமா? ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வருமா? என்பதே இந்த துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மோசமான பின்னடைவு
குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக, பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிலும் நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இதன் பின்னர் பணப்புழக்கமே இருந்தாலும், அத்தியாவசியம் தவிர மக்கள் மற்றவைக்கு செலவு செய்ய யோசித்தனர்.
வரி விலக்கு இருக்குமா?
இதன் காரணமாக ரியல் எஸ்டேட் துறையானது மிக மோசமான பின்னடைவையே சந்தித்தது. இந்த நிலையில் 2021ம் நிதியாண்டில் ஆவது தேவை அதிகரிக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில் இந்த துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பே வரி விலக்கு அளிக்கப்படுமா என்பது தான்.
சலுகைகள் எதிர்பார்ப்பு
அது மட்டும் அல்ல, தனி நபர் வரி நிவாரணம், வீட்டு வசதி மீதான வரிச்சலுகை, வட்டி விகிதம், ஜிஎஸ்டியில் சலுகை, உள்கட்டமைப்பு துறை என பல சலுகைகளை அறிவிக்கப்படும்போது இது தேவையை ஊக்குவிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 8 சதவீத பங்களிப்பினை வழங்கும் ரியல் எஸ்டேட் துறையில், அடுத்த 10 ஆண்டுகள் பெரிய அளவில் வளர்ச்சியினை காணும் அளவுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தளர்வு அளிக்கப்படலாம்
முத்திரை வரியில் தளர்வுகள் அளிக்கப்படலாம். இது விற்பனையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். வீட்டு உரிமையாளர்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வாங்குபவர்களுக்கு கிடைக்கக்கூடிய தற்போதைய வருமான வரி சலுகைகளை அதிகரிக்கலாம்.
இந்த சலுகைகள் அளிக்கப்படலாம்
வணிக ரியல் எஸ்டேட் துறை சமீபத்திய ஆண்டுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட சிறந்ததாக உள்ளது. எனினும் தேவையானது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சில சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களுக்கான ஜிஎஸ்டி உள்ளீட்டு கடன் கிடைக்கும் தன்மை மற்றும் REIT அலகுகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரிவிதிப்புக்கான காலத்தைக் குறைத்தல் ஆகியவை இத்துறையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்..