இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் திட்டமிட்டபடி இந்த வருடம் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4வது பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வார்.
பில்லியன் டாலர் கேள்வி
ஏற்கனவே இரண்டு கொரோனா அலையில் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், தற்போது துவங்கியுள்ள 3வது தொற்று அலையைத் தனது பட்ஜெட் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை எப்படித் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்கப்போகிறார் என்பது தான் தற்போது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்
கடந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைக் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீட்டு எடுக்க மத்திய நிதியமைச்சகம் பல ஊக்க திட்டங்களை அறிவித்தது. குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் பெரிய அளவில் அளிக்கப்பட்டது.
சரிவு
இப்படி இந்த வருட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் கொரோனா தொற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பது பற்றிய அறிவிப்புகள் தான் முக்கியத்துவம் பெறும்.
செலவினம் மற்றும் வரி
தற்போது உள்ள சந்தை நிலவரத்தின் படி, மத்திய அரசு நல்ல காலங்களில் செலவினங்களைக் குறைக்க வேண்டும்/வரிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் மோசமான காலங்களில் செலவுகளை அதிகரிக்க வேண்டும்/வரிகளைக் குறைக்க வேண்டும் என்ற முக்கியமான கொள்கை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
ஆனால் இதேவேளையில் மத்திய நிதியமைச்சகம் அறிவித்த பல ஊக்க திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவினாலும் பணவீக்கத்தை அதிகரிக்க மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளது. இதனால் தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் பணவீக்கத்தை மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் தீர்க்கப்படும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை கொரோனா பாதிப்புகளைக் களையும் வண்ணமாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்க கூடியதாகவும், வருமான இழப்புகளைச் சமாளிக்கக் கூடியதாகவும், சாமானிய மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு பட்ஜெட் அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இதற்கு முன் தாக்கல் செய்த மூன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் எப்படி இருந்தது என்பது குறித்துக் கமெண்ட் பண்ணுங்க...