கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. ஒமிக்ரான் தொற்றால் பெரிய இழப்பு இல்லை என்றாலும் 2 கொரோனா அலை பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணாகியுள்ளது தான் தற்போது முக்கியமான தலைவலியாக மாறியுள்ளது.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கத் தேவையில்லை.
பிப்ரவரி 1ஆம் தேதி
மத்திய அரசு திட்டமிட்டபடி பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பல புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடும், பல சலுகைகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாகப் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து தற்போது 2022ல் 4வது முறையாகப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் சூட்கேஸ்
பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை சூட்கேஸ்-ல் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். 2019ல் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சூட்கேஸ்-ஐ நீக்கிவிட்டுச் சிவப்புத் துணியில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்து தாக்கல் செய்தார், அதன் பின்பு இது சிவப்பு கவராக மாறியது.
டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை
ஆனால் கடந்த ஆண்டுக் கொரோனா தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் அறிக்கை காகித வடிவில் வெளியிடப்படாமல் டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாக வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கை எப்படித் தாக்கல் செய்யப்படும் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி
இந்த ஆண்டுக்கான அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியும் தாமதமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.