"தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்" என்ற பாடல் வரிகளில் வருவது போல நம்மூர் மக்கள் உறவுமுறைகளுக்கு கூட, பிடித்தமான தங்கத்தின் பெயரினை வைத்தே அழைக்கின்றனர். இது வெற்று ஆபரணமாக மட்டும் அல்லாமல், உணர்வுகளில் கலந்த ஒரு அம்சமாக உள்ளது.
இப்படிப்பட்ட தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் நாடு இந்தியா தான். அரசும் தங்கத்தின் இறக்குமதியினை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
ஒரு புறம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க அரசு போராடி வந்தாலும், தங்கம் இறக்குமதியினை மட்டும் கட்டுக்குள் வைக்கவே முடியவில்லை. கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஆன்லைனில் புக் செய்து வாங்கி வந்தனர். ஆக அரசு என்னதான் வரியினைக் கூட்டினாலும், வாங்குவது மட்டும் குறையவில்லை எனலாம்.
உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பு
அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியினை அதிகரித்தது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையவில்லை. அதேசமயம் நகை ஏற்றுமதியானது மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நகை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்களின் மிகப்பெரிய கோரிக்கை, தங்கத்தின் இறக்குமதி வரியினை குறைக்க வேண்டும் என்பது தான்.
பட்ஜெட்
இந்த நிலையில் பட்ஜெட் 2022ல் இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கத்திற்கான இறக்குதி வரி12.5%ல் இருந்து 7.5% ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இது 4% ஆக குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது.
விலை குறையும்
வரியை குறைத்தால் தங்க நகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிக உதவிகரமாக இருக்கும். மொத்தத்தில் நகை வாங்குவோருக்கும் இதன் மூலம் விலை குறையும். இது நகை விற்பனையையும் ஊக்குவிக்கும். அதோடு அரசுக்கும் இறக்குமதி, ஜிஎஸ்டி மூலம் வருவாயும் கிடைக்கும். இவ்வாறு இறக்குமதி வரியினை குறைத்தால், அது எம்சிஎக்ஸ் சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.