டெல்லி: பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட் 2022(Budget 2022) தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு தரப்பில் இருந்தும் பலவிதமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதே பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளும் இருந்து வருகின்றன.
குறிப்பாக ஓமிக்ரான் காரணமாக மீண்டும் பாதிகப்படலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் பலமாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
மக்கள் அச்சம்
இதற்கிடையில் ஓமிக்ரான், உருமாறிய டெல்டா கொரோனா, கொரோனா, கோவிட் 19 என மக்களை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் பெருந்தொற்றுக்கு மத்தியில், இன்சூரன்ஸ் வேண்டாம் என்று கூறியவர்கள் கூட இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்தளவுக்கு இந்த கொரோனா மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு செலுத்தும் பிரீமியங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன. கடந்த ஆண்டிலேயே பட்ஜெட்டில் ஹெல்த்கேர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், சில சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு செலுத்தப்படும் இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கான வரிச்சலுகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
முக்கிய பங்கு
பரவி வரும் ஓமிக்ரான், கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் மருத்துவமனைகளை நாடுவதும் அதிகரித்துள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறப்புகளும் பெருந்தொற்று காரணமாக அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ் துறையின் பங்கும் அவசியமானதாக இருந்தது.
பட்ஜெட்டிற்கு பரிந்துரை
இன்றைய காலகட்டத்திலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இன்சூரன்ஸ் எடுக்கும் விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. எனினும் கொரோனாவின் வருகைக்கு பிறகு இது கணிசமாக அதிகரித்துள்ளது. ஆக இத்துறை சார்ந்த நிபுணர்கள் இன்சூரன்ஸின் அவசியம், மக்களை ஊக்குவிப்பதற்காக பல பரிந்துரைகளையும் இந்த பட்ஜெட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மெடிக்கல் பாலிசிக்கு வரிச்சலுகை
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களை காப்பாற்றுவதில் இன்சூரன்ஸ்கள் அவசியமான ஒன்றாக உள்ளன. இந்தியாவில் நீங்கள் அல்லது உங்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீட்டினை வாங்கினால், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80டி படி வரி விலக்கு பெற முடியும். இதில் உங்களுக்காக செலுத்தப்படும் பிரீமியம் எனில் 25,000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெறமுடியும். இதே மூத்த குடிமக்களாக இருந்தால் 50,000 ரூபாய் வரையில் வரிச்சலுகை பெற முடியும். இந்த சலுகைகளை உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வரி சலுகை வேண்டும்
வருமான வரி சட்டப்பிரிவு 80சி மற்றும் 10(10டி)யின் கீழ் வரி விலக்கு இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகின்றது. எனினும் தனியாக இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு என வரிச்சலுகை 1 லட்சம் ரூபாய் வரையில் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
குறைவான ஜிஎஸ்டி
இதற்கிடையில் ஒரு தரப்பு இன்சூரன்ஸ்களையும் ஜிஎஸ்டி-யினை ஹெல்த் பாலிசிகளுக்கு குறைக்க வேண்டும். குறைந்த ஜிஎஸ்டியில் பாலிசிகளை அளிக்க வேண்டும். இது பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறித்த அறிவிப்புகள் இருக்காது எனினும் குறைந்த ஜிஎஸ்டியின் கீழ் லைஃப் இன்சூரன்ஸ்கள் வகைப்படுத்தப்பட வேண்டும்.