பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மூலம் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தப் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன்பு மத்திய நிதியமைச்சர் தலைமையில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது, இது எதற்காக..? ஏன் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இது நடத்தப்படுகிறது..? இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன..?
அல்லா தயாரிப்பு நிகழ்ச்சி
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஹல்வா விழா நடைபெறுவது வழக்கம். இது பட்ஜெட் செயல்முறையின் இறுதிக் கட்டங்கள் அல்லது கடைசிக் கட்டத்தை அடைவதைக் குறிக்கிறது.
நிதி அமைச்சகம்
வழக்கமாக, டெல்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தின் வடக்குப் பகுதியில் அல்வா தயாரித்து நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் உருவாக்கும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம்.
முக்கிய அதிகாரிகள்
இந்த அல்வா தயாரிக்கும் விழாவில் நிதியமைச்சர் மற்றும் நிதி அமைச்சகத்துடன் பணிபுரியும் மற்ற உயர்மட்ட பிரதிநிதிகள் எனப் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வது வழக்கம்.
பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி
மேலும் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்ட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அச்சிடப்படும் பணியை அதிகப்படியான பாதுகாப்பு உடனும், ரகசியமாகவும் செய்யப்படுவது வழக்கம்.
ஒமிக்ரான் தொற்று
2021ல் அல்வா நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டதட்ட பட்ஜெட் அறிவிக்க 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தாமதமானதால் அல்வா நிகழ்ச்சியும் தாமதமாகியுள்ளது.
பட்ஜெட் அறிக்கையின் மாற்றங்கள்
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரயில்வே பட்ஜெட்-ஐ தனியாகத் தாக்கல் செய்து வந்த நிலையில் தற்போது பொதுப் பட்ஜெட் உடன் சேர்த்துத் தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை தற்போது பிப்ரவரி மாதத்தின் முதல் நாளே தாக்கல் செய்யப்படுகிறது.