இந்திய ரியல் எஸ்டேட் துறை கொரோனா தொற்றுக் காலத்தில் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு இருந்த நிலையில் வீடு விற்பனை வீழ்ச்சி அடைந்து அதளபாதளத்தைத் தொட்டது.
இந்த நிலையில் பல்வேறு தளர்வுகள், தள்ளுபடி காரணமாக 2022 ஆம் ஆண்டில் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஆடம்பர வீடுகளின் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டது.
இதன் மூலம் 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் விற்பனை 50 சதவீதம் அதிகரித்து இருந்தது.
ரியல் எஸ்டேட்
2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே பல காரணங்கள் மத்தியில் இந்தியா முழுவதும் வீட்டு விலைகள் தாறுமாறாக அதிகரிக்கும் காரணத்தால் புதிய வீடுகளின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிப்போர்ட் வெளியானது.
பட்ஜெட் 2023
இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி முடிந்து மத்திய நிதியமைச்கம் பட்ஜெட் அறிக்கையைப் பிரின்ட் செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் வரும் என்பது பெரும் கேள்வி குறியாக இருக்கும் வேளையில், நிர்மலா சீதாராமன் எப்படிப்பட்ட அறிவிப்பை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருப்பது மூலம் பெரும் மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் மத்திய அரசு கட்டாயம் ரியல் எஸ்டேட் டிமாண்ட் குறையாமல் பார்த்துக்கொள்ளும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதனால் முக்கியமான அறிவிப்பு வெளியிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
அனைவருக்கும் சொந்த வீடு
மோடி தலைமையிலான அரசு அனைவருக்கும் சொந்த வீடு அளிக்க வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்படுகிறது. இதேபோல் மலிவு விலை வீடுகளுக்கு ஜிஎஶ்டி வரி 8 சதவீதத்தில் 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. பிற வீடுகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 2019 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைத்தது.
மலிவு விலை வீடுகள்
ஆனால் நகரங்களில் மலிவு விலை வீடுகள் என்ற அளவீட்டில் நகரங்களில் 45 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, இதை அதிகரிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் கட்டுமான பொருட்களின் விலைவாசி பெரிய அளவில் அதிகரித்து இருக்கும் வேளையில் 45 லட்சம் ரூபாய் என்பது நகரங்களில் ஒரு வீட்டை வாங்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.
55 லட்சம்
இதனால் இந்தப் பட்ஜெட்டில் இதன் அளவீட்டை 45 லட்சம் ரூபாயில் இருந்து 50 - 55 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் வரிச் சலுகை அனுபவிப்பதோடு 2023 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் டிமாண்ட் சரியும் எனக் கூறப்படும் வேளையில் இதைச் சரி செய்து தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க முடியும்.