மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட் குழு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையைப் பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை ரெசிஷன் பாதிப்பில் மாட்டிக்கொள்ளாமல் அதே நேரத்தில் மக்களின் நிதி நிலையில் ஏற்பட்டு உள்ள தாக்கத்தைத் தனிக்கும் வகையில் பட்ஜெட்-ஐ தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் "லாக்-இன்" செயல்முறையைத் துவங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ஜனவரி 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
கொரோனா தொற்று காரணத்தால் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள், நிதியமைச்சக ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் கடந்த ஆண்டு இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பட்ஜெட்
ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் அறிக்கை தயாரிப்புகள் முடிக்கப்பட்டு உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் பல ஆண்டுகளாக மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி
வழக்கமாக யார் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாரோ அவர் தான் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்குவார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ஜனவரி 26ஆம் தேதி அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியைத் துவங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் சக ஊழியர்களுக்கும், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த அல்வா பகிரப்படும்.
பிரின்ட்டிங் பிரஸ்
இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சிக்குப் பின்பு தான் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரின்ட்டிங் பிரஸ்-ல் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடப்படும். இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சகத்தின் நார்த் பிளாக் பகுதியில் நடக்கும்.
பாதுகாப்பு, ரகசியம்
இந்த அச்சிடப்படும் பணியை அதிகப்படியான பாதுகாப்பு உடனும், ரகசியமாகவும் செய்யப்படும் காரணத்தால் நாடாளுமன்ற அச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அங்கேயே தங்கி அச்சிடுவது வழக்கம். பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தான் அச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வெளியேறுவார்கள்.
2021, 2020 பட்ஜெட் நிகழ்ச்சிகள்
2021ல் அல்வா நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜனவரி 23ஆம் தேதி நடந்தது. இது கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவிக்க 9 நாட்களுக்கு முன்பாகச் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தாமதமானதாலும், தொற்று அச்சம் காரணமாக அல்வா நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது.
2024 பொதுத் தேர்தல்
2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடக்கும் காரணத்தால் 2024ல் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை மட்டுமே பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய முடியும். இதனால் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தான் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கையாக உள்ளது.
நித்தி அயோக்
எப்போதும் போலவே மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் அறிக்கையை நித்தி அயோக் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகத்துடன் பல வாரங்களாக ஆலோசனை செய்து தேவையான நிதி ஊக்கம், கொள்கை ஊக்கம் என அனைத்துப் பட்ஜெட் அறிவிப்பு வாயிலாக அறிவித்துள்ளது.
இதேபோல் இந்த வருடம் டிஜிட்டல் பட்ஜெட் குறித்து எவ்விதமான அறிவிப்பும் இல்லை.