மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில் சாமானிய மக்களுக்குப் பலன் அடையும் வகையில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியானது.
இதில் மிகவும் முக்கியமான ஒன்று தனிநபர் வருமான வரி விதிப்பில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தான், இந்த அறிவிப்பு மூலம் யாருக்கு லாபம்..? எத்தனை பேருக்கு லாபம் என்ற கேள்வி பட்ஜெட் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து மக்கள் மத்தியில் உள்ளது.
சாமானிய மக்கள்
இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் சாமானிய மக்கள் அதிகம் பலன் அடைவதாகக் கூறப்படும் ஒரு அறிவிப்பு என்றால் புதிய வருமான வரி விதிப்பில் 5 லட்சம் வரையில் மட்டுமே இருந்த டாக்ஸ் ரிபேட் அளவை 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதும், இதனுடன் standard deduction கீழ் இருக்கும் 50000 ரூபாய் வரிச் சலுகை அளவீட்டை புதிய வரி வருமான வரி பிரிவுக்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
7.5 லட்சம் ரூபாய்
இதன் மூலம் வருடத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தைக் கொண்ட அனைவருக்கும் ஜீரோ வருமான வரி. இந்த அறிவிப்பு மூலம் 500000 முதல் 700000 ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்ட 1 கோடிக்கும் அதிகமான வருமான வரி செலுத்துவோர் பயன்பெற உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகள் கூறுகிறது.
1 கோடி பேருக்கு பலன்
ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவோரின் தரவுகள் அடிப்படையில் 5-7 லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெறுவோர் பட்டியலில் இருக்கும், 1 கோடிக்கும் அதிகமானோர் இந்த டாக்ஸ் ரிபேட் மூலம் பயன் அடைய உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
வரிப் பலகை
இதுநாள் வரையில் இந்த வரிப் பலகை கீழ் இருப்பவர்கள் பல்வேறு வரிச் சேமிப்பு முதலீடுகள் வாயிலாக வரி சலுகையைப் பெற்று வந்த நிலையில் தற்போது எவ்விதமான முதலீடும் செய்யாமலேயே முழுமையாக வருமான வரி சலுகையைப் பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
இதைத் தாண்டி இந்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான அதிகபட்ச வைப்பு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டம்
இதேபோல் மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ஒரு கணக்கிற்கு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் போல் கூட்டுக் கணக்கிற்கு அதாவது ஜாயின்ட் கணக்கிற்கு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
டி.வி.சோமநாதன்
சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தும் முடிவு மூத்த குடிமக்கள் மற்றும் வங்கிகளை விட அதிக வருமானம் அளிக்கும் பாதுகாப்பான அரசு வைப்புத் திட்டங்களில் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்பு மூலம் நடுத்தர மக்களுக்குப் பயனளிக்கும் என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.