மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், இது குறித்தான வேலைகளில் நிதியமைச்சகம் பரப்பரப்பாக செயல்பட்டு வருகின்றது. நடப்பு மத்திய அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டில் பல முக்கிய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒன்று கிரிப்டோகரன்சிகள் குறித்தான ஒழுங்குமுறை அவசியம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக வரவிருக்கும் பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிரிப்டோ சந்தை
ஒரு காலத்தில் பல ஆயிரம் கோடிகளில் புரண்ட கிரிப்டோசந்தையானது, இன்று பல நூறு கோடியாக குறைந்துள்ளது எனலாம். ஒரு தரப்பினர் கிரிப்டோகரன்சிகள் கட்டாயம் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பு இது உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தினையும் சரிவுக்கு கொண்டு செல்லும் என பயமுறுத்துகின்றனர்.
சரியான நெறிமுறை அவசியம்
இப்படி பற்பல கருத்துகளுக்கு மத்தியில் கிரிப்டோகரன்சிகள் குறித்தான சரியான நெறிமுறை என்பது அவசியமான ஒன்று என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள், கடந்த ஆண்டில் அதல பாதாளம் நோக்கி சென்றன. இதற்கிடையில் பற்பல கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் திவால் நிலையை எட்டின.
சரியான முதலீட்டு அம்சமா?
கிரிப்டோகரன்சிகளுக்கு எந்த விதமான உத்தவாதமும் இல்லாத நிலையில், அவற்றை எப்படி ஒரு அசெட் ஆக கருத முடியும். இது இன்னும் தெளிவான ஒரு முதலீட்டு அம்சமாக இல்லையே என்பது ஒரு தரப்பின் வாதமாக உள்ளது. ஆக ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் குறித்து ஒரு தெளிவான நெறிமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆக இது குறித்து பட்ஜெட் 2023ல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்புகள் உள்ளன.
கிரிப்டோகரன்சிகள் மீது வரி
இது குறித்து காஷாவின் தலைமை நிர்வாக அதிகாரியான குமார் கவுரவ், இ- ரூபாய் கொண்டு வரும்போது அரசு கூடுதலான விதிமுறைகளையும் அறிவிக்கலாம் என தெரிவிதுள்ளார்.
அதேபோல கிரிப்டோகரன்சிகள் மீது வரியை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் அரசின் வருமானத்தினை அதிகரிக்கலாம். இதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கிரிப்டோ மசோதா
குறிப்பாக கிரிப்டோகரன்சி மசோதா குறித்தான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது கிரிப்டோகரன்சிகளை கட்டுப்படுத்தலாம். இது கிரிப்டோகரன்சிகளை நெரிமுறைப்படுத்தலாம்.
பொதுவாக கிரிப்டோகரன்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் தீவிரவாதத்திற்கு நிதியளிக்கப்படுகிறது என பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருந்து வருகின்றது. ஆக கிரிப்டோ நெறிமுறைகளில், மசோதாவில், இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி கட்டுப்பாட்டாளர்
பங்கு சந்தை, தங்கம் போல கிரிப்டோகரன்சிகளையும் ஒழுங்குபடுத்த செபியினைபோல அதிகாரப்பூர்வ அமைப்பு உருவாக்கபப்டலாம். அல்லது செபியையே நியமனம் செய்தாலும் அது ஆச்சரிப்படுத்துவதற்கில்லை. மொத்தத்தில் கிரிப்டோகரன்சிகள் என்பது பங்கு சந்தை, கரன்சிகள், கமாடிட்டிகள போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதலீட்டாளார்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆனால் இதனை இந்தியா மட்டும் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் உலக நாடுகள் இணைந்து ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு சரியானதொரு வாய்ப்பாக ஜி20 அமைப்பு பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தியா தற்போது தலைமையேற்றுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கப்படலாம்.