மத்திய பட்ஜெட் 2023 ஆனது பிப்ரவரி 1ம் தேதியன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் தொடங்கி பெரிய் பெரிய தொழில் முனைவோர் வரையில் பற்பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் முடங்கி போன சிறு குறு நிறுவனங்களுக்கு ஆறுதலான அறிவிப்புகள் ஏதேனும் வருமா? அவற்றை ஊக்குவிக்குமா? என்ற பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது.
பொதுவாக சிறு குறு நிறுவனங்களுக்கு பெரும் சவாலான விஷயமே ஜிஎஸ்டி வரி மற்றும் மூலதன பொருட்களின் விலையில் அடிக்கடி விலை மாற்றம் தான். இது சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
இந்தியாவின் முதுகெலும்புகள்
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுகுறு நிறுவனங்கள், இந்தியாவின் ஜிடிபியில் சுமார் 30% பங்கு வகிக்கிறது. இது ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான வேலை வாய்ப்பினை வழங்குவதும் MSME-க்கள் தான். ஆக இந்த துறையும் பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாகும்.
விலையை கட்டுப்படுத்தணும்
ஆக சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்களுக்கான மூலதன பொருட்கள் விலையை கட்டுப்படுத்தவும், அவற்றை நிலையாக வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதேபோல சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சந்தைப்படுத்தவும் அரசு சலுகைகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே இதற்காக பிரத்யேகமாக ஒரு தளத்தினை அரசு உருவாக்கியிருந்தாலும் அதனை சிறப்பாக செயல்படுத்த உதவ வேண்டும்.
இறக்குமதி வரி அதிகம்
குறிப்பாக ஏற்றுமதி செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை அறிவிக்க வேண்டும். இந்தியாவில் சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவினை விட சீனா பொருட்கள் விலையானது மிக மலிவு என்பதால், சில்லறை விற்பனையாளார்கள், அவற்றை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஆக அதுபோன்ற இறக்குமதி பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். இது அரசுக்கும் ஒரு புறம் வருவாய் அதிகரிக்க வழிவகுக்கும். இந்தியாவின் சிறு உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அதேசமயம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியில் சலுகை அளிக்கப்பட வேண்டும்.
எளிதாக கடன் கிடைக்கனும்
குறிப்பாக சிறு தொழில்களை ஊக்குவிக்க மகளிர் குழுக்கள், மகளிர், இளைஞர்களுக்கு, எளிதாக கடன் உதவி கிடைக்கும் வகையில் செய்யலாம். தற்போது முத்ரா திட்டத்தின் கீழ் இதுபோன்ற உதவிகள் கிடைத்தாலும், பெரிதாக வங்கிகளும் இதுபோன்ற திட்டங்களில் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை.
நீட்டிக்கப்பட வேண்டும்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த, Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) சேவையை விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக உற்பத்தி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இந்த சலுகையை நீட்டிக்கப்பட வேண்டும். இதற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.