சமீபத்தில் OXFAM வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64.3 சதவீத வரி தொகையை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கீழ் தட்டில் இருக்கும் 50% மக்களிடமிருந்தும் தான் வருகிறது என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அரசுக்கு அதிகப்படியான வரி வருவாயை அளிக்கும் மக்கள் தற்போது விலைவாசி உயர்வால் கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
இப்பிரிவு மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் என்னவெல்லாம் நன்மை கிடைக்கும்..?
பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதிகப்படியான பங்கு வகிக்கும் மாத சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்கள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி விதிப்புப் பலகை மற்றும் வரி விதிப்பு அளவுகளில் அதிகப்படியான மாற்றங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், மத்திய அரசால் தற்போது இருக்கும் பொருளாதார வர்த்தகச் சூழ்நிலையில் எத்தகைய அறிவிப்பை வெளியிட முடியும், இது மக்களுக்கு எப்படி நன்மை அளிக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தேவைக்கான காரணம்
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மக்கள் அதிகப்படியான வரிச் சலுகை மற்றும் தளர்வுகளை எதிர்பார்க்க முக்கியமான காரணம், இந்தியாவில் காஸ்ட் ஆப் லிவிங் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
8 வருடம்
இதேபோல் 2014க்கு பின்பு வரிச் சேமிப்பு அளவுகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை, இந்த 8 வருடத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துள்ளதால் இதை ஈடு செய்ய மத்திய அரசு கட்டாயம் வரிச் சலுகை அல்லது தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வருமான வரிப் பலகை மாற்றம்
தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய மற்றும் புதிய வருமான வரி விதிப்பு முறையில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் முழுமையான வரி விலக்கும், 5 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடிப்படை வரி விலக்கு அளவை 2.5 லட்சம் ரூபாய் அளவில் இருந்து 5 லட்சம் வரையில் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது 2023-24 பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றால் விலைவாசி உயர்வை சமாளிப்பது மட்டும் அல்லாமல் மக்களின் நிதி சேமிப்பை பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.
HRA விதிகள்
இந்தியாவில் வீட்டு வாடகை அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது அதிலும் குறிப்பாகக் கொரோனாவுக்குப் பின்பு வீட்டு வாடகை அளவு 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்சம் மாத சம்பளக்காரர்கள் பெரு நகரங்களுக்கான HRA வரம்பை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.பெரு நகரங்களில் இருக்கும் மாத சம்பளக்காரர்களுக்கு மாத செலவுகளில் பெரும் பகுதி வீட்டு வாடகையாக இருக்கும் நிலையில் HRA அளவை உயர்த்தும் போதும் கட்டாயம் குறிப்பிடத்தக்க அளவிலான நன்மை கிடைக்கும்.
புதிய வீடு வாங்குவோர்
தற்போது பிரிவு 24B கீழ் வீடு வாங்கியோருக்கு வருடம் 2 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி தொகைக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை அடுத்தடுத்து அதிகரித்து வந்த நிலையில் இந்த வரி வசூலை அளவீட்டை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 80C பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்காக அசல் (Principal) தொகைக்கான வரி சலுகையை 3 லட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
பர்சனல் லோன்
இந்தியாவின் மொத்த கடன் சந்தையில் கல்வி கடன் மற்றும் தனிநபர் கடன் 35 சதவீதமாக இருக்கும் நிலையில், வருமான வரிச் சட்டம் 80E கீழ் கல்விக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. தனிநபர் கடனுக்கு எவ்விதமான சலுகையும் இல்லாத நிலையில் இதற்குச் சலுகை அளிக்கப்பட்டால் கட்டாயம் மக்களின் செலவிடும் அளவு அதிகரிக்கும், அதேபோல் இந்திய சந்தையில் சரிந்துள்ள டிமாண்ட் மேம்படுத்தப்படும்.