budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் ஆனது மத்திய பாஜக அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் என்பதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முக்கிய அறிவிப்புகள் வரலாம்
சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கானது என்றும் கூறியிருந்தார். ஆக அவர்களை குறிவைத்தே இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக பயனுள்ள ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நடுத்தர மக்கள் தான் டார்கெட்
இந்தியாவில் சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமாக வரி செலுத்துவோர் உள்ளனர். இதில் மாத சம்பளதாரர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களே மறைமுக வரியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆக இந்த நடுத்தர மக்களை குறிவைத்து, குறிப்பாக 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் உள்ள மக்களுக்காக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்காது?
தற்போது இந்தியா உள்பட பல நாடுகளிலும் உச்சத்தில் உள்ள பணவீக்கம், வருமானம் சரிவு, மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கைகள், மானியங்கள் பிரச்சனை என பலவும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே மக்கள் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. எனினும் சில திட்டங்களில் மக்களை கவறும் வகையில் வரி சலுகை இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பல புதிய அறிவிப்புகள் வரலாம்
இந்திய நடுத்தர மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், அவர்களின் கஷ்டத்தினையும் புரிந்து கொண்டுள்ளதாக கூறினார். ஆக அரசு அவர்களையும் கண்கானித்து வருகின்றது. ஆக அவர்களுக்கு சாதகமானதொரு அறிவிப்புகளும் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பல புதிய அறிவிப்புகள் வரலாம் என்றும் தெரிகிறது.
அரசு இதனை செய்யணும்
வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் மத்தியில் 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் வரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆக இதனை 4 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். இதே 5 லட்சம் ரூபாயாக இருக்கும் வரம்பினை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். வருமான வரி விலக்கு சலுகைகள் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது மக்கள் மத்தியில் நுகர்வினை அதிகரிக்கும். இதன் காரணமாக தேவையானது அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சலுகைகள் அதிகரிக்கணும்
தொடர்ந்து பணவீக்கமானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதனால் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாயாக இருக்கும் சலுகையினையும், ஊக்குவிக்கும் விதமாக அதிகரிக்க வேண்டும். இது மட்டும் அல்ல, 80டி, 80டிடி, 80இ உள்ளிட்ட பல பிரிவுகளும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக இருக்க வேண்டும்.
மருத்துவ செலவினங்களுக்காக போடப்படும் இன்சூரன்ஸ் தொகைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் 25,000 ரூபாயினை அதிகரிக்க வேண்டும். தற்போது இன்சூரன்ஸ் பிரீமியங்களும் உயர்ந்துள்ளன. ஆக சலுகையும் உயர்த்தப்பட வேண்டும்.
ஊக்குவிப்பு
அரசு முதலீட்டு திட்டங்களாக தேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் மக்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குவோருக்கான சலுகையினை அளிக்க வேண்டும்,. இது அவர்களையும் ஊக்குவிக்கும். ரியல் எஸ்டேட் துறையினையும் ஊக்குவிக்கும்.