மத்தியில் ஆளும் மோடி அரசு வரும் பிப்ரவரி மாதத்தில் வோட் ஆன் அக்கவுண்ட் (Vote on Account) எனப்படும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. நாட்டின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் தற்காலிக செலவீனங்களுக்கான அனுமதியை இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் தரலாம்.
வரிகள் மற்றும் இதர வருவாய்கள் மூலம் உருவாக்கப்படும் தொகுப்பு நிதியில் இருந்து தேவையான நிதியைப் பயன்படுத்துவதற்கு வோட் ஆன் அக்கவுண்ட் இன்றியமையாததாகும். இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கும் காரணத்தால் புதிய ஆட்சி அமையும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு கஜானாவில் இருந்து நிதியை பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 116இன் படி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் அனுமதி பெறும்.

வோட் ஆன் அக்கவுண்ட் மூலம் இந்திய அரசின் நிதி தொகுப்பில் இருந்து நாட்டுக்குத் தேவையான பணத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், இந்த வருடம் பொது தேர்தல் நடக்கும் காரணத்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் முழுமையான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்.
2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ய அரசு தயாராகிவருகிறது. முழுமையான பட்ஜெட்டை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு தாக்கல் செய்யும். இந்த இடைக்கால பட்ஜெட் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். இவ்வாறு நாடாளுமன்ற அனுமதி பெற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறைதான் வோட் ஆன் அக்கவுண்ட்.
ஓர் அரசு தனது பதவிக் காலத்தை முடித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்று வோட் ஆன் அக்கவுண்ட்டை தாக்கல் செய்யும். இதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான நிதியை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 266இன் படி மத்திய அரசு வரிவிதிப்புகள், கடன்களில் இருந்து வரும் வட்டித்தொகை, மாநில அரசுகளின் வரி பங்களிப்பை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது.
இந்த இடைக்கால பட்ஜெட் புதிய அரசு அமையும் வரை செயல்பாட்டில் இருக்கும். இதன் மூலம் புதிய வரி விதிப்புகளை செய்ய முடியாது. அடிப்படை செலவுகளுக்கு மட்டும் நிதியை பயன்படுத்தலாம். இதன் மூலம் அரசின் செயல்பாட்டை சுமுகமாக நடத்துவதற்கு இடைக்கால பட்ஜெட் உதவுகின்றது.


Click it and Unblock the Notifications