டெல்லி: நாடே மத்திய பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தான் காத்திருக்கிறது. குறிப்பாக பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கை செலவினம் உயர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் அரசு அதற்கேற்ற வகையில் வருமான வரி விகிதங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அந்த வகையில் மத்திய அரசு பின்வரக்கூடிய ஐந்து முக்கிய மாற்றங்களை அறிவிக்கலாம் என்கிறார் மும்பையை சேர்ந்த வரி நிபுணர் பல்வந்த் ஜெயிந்த். மிண்ட் தளத்திற்கு அவர் அளித்த பதிலை காணலாம்..

வருமான வரி விகிதம்: இந்தியாவில் தற்போது புதிய வரி கணக்கு நடைமுறை மற்றும் பழைய வரி கணக்கு நடைமுறை என இரண்டு நடைமுறைகளின் கீழ் நாம் வருமான வரியினை தாக்கல் செய்ய முடியும் .மத்திய அரசனைப் பொறுத்தவரை புதிய வரி கணக்கு நடைமுறைக்கு பெரும்பாலானவர்கள் மாற வேண்டும் என விரும்புகிறது.
எனவே புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி விகிதங்களில் அரசு மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. புதிய வரி நடைமுறையில் தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த ஒரு வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை: புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் மூத்த குடிமக்களின் வருமான வரியை கணக்கிடுவதற்கு புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக வருமான வரி உச்சவரம்பையும், குறைந்த வரி விகிதங்களையும் கொண்டு வர வேண்டும் என்கிறார்.
தற்போது மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. மிக மூத்த குடிமக்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
நிலையான வரிக்கழிவு : தற்போது மத்திய அரசு பழைய வரி நடைமுறை அல்லது மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டிலுமே ஒரு தனி நபருக்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை நிலையான வரிக்கழிவு வழங்குகிறது. இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி: கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். இதனால் தங்கத்தின் இறக்குமதி அரசு எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது .
எனவே இந்த வர்த்தக பற்றாக்குறையை போக்கவும் அதிக அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்கவும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என கூறுகிறார்.
80சி பிரிவில் மாற்றம்: பழைய வரி நடைமுறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு பிரிவு 80சி இன் கீழ் ஓராண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. 1.5 லட்சம் ரூபாய் என்பது 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த பத்து ஆண்டுகளில் பணவீக்க விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் இதனை 3.5 லட்சமாக உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications