பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் முடங்கியிருந்த விமான சேவையானது, தற்போது தான் முழுமையாக மேன்மை அடையத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் பைலட்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20% சம்பள அதிகரிப்பினை செய்துள்ளது. எனினும் மற்ற ஊழியர்களுக்கு அதிகரிப்பு குறித்தான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
செலவினை கட்டுப்படுத்த கட்டாய விடுமுறை
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் (ECLGS) முதல் தவணை தொகையாக சுமார் 125 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் குருகிராமை தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம், செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள, மூன்று மாத காலத்திற்கு ஊதியம் இல்லாமல் சில விமானிகளை கட்டாயமாக விடுமுறையில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது தற்காலிகமானதா?
இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் மீண்டும் பணியில் தொடருவார்களா? பணிக்கு திரும்புவார்களா? என்பதும் சந்தேகத்திற்குரிய ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இழப்பு
ஸ்பைஸ்ஜெட்டின் இந்த நடவடிக்கையானது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஏற்கனவே நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 784 கோடி ரூபாய் இழப்பினையும் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் நிறுவனம் கட்டாய விடுமுறை என்ற அதிரடி நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தக்க வைக்க நடவடிக்கையா?
அதேசமயம் இருக்கும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மத்தியில் இது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ல் தான் இந்த நிறுவனம் 737 மேக்ஸ் ரக 30 விமானங்களை தனது போர்ட்போலியோவில் இணைத்தது.
மேலும் பாதிப்பு
இதன் பிறகு பரவி வந்த கொரோனா பெருந்தொற்றால் விமான நிறுவனங்கள் பெரும் சரிவினைக் கண்ட நிலையில், தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. எனினும் தற்போதும் கூட சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 27 அன்று DCGA விமான சேவைகளில் 50% விமான சேவைகளை மட்டுமே இயக்க உத்தரவிட்டது நினைவுக்கூறத்தக்கது.