டெல்லி: பல நாடுகளில் நிலைகொண்டுள்ள கொரோனாவினால் பல நாடுகள் தங்களது நாடுகளுக்கு, மற்ற நாட்டவர்கள் யாரும் வர வேண்டும் என அறிவித்துள்ளன.
ஏன் இந்தியாவிலேயே அத்தியாவசியமற்ற காரணம் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் விமான பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் ஒரு புறம் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்று தேதிகளுக்கு மாற்றவோ கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிரடி சலுகைகள்
நாம் அதிக செலவு செய்து பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும் போது அதற்கும் ஒரு கட்டணம் விதிக்கப்படும். அதையே உங்களுக்கு தகுந்த மற்ற நாட்களில் மாற்றம் செய்தால், அதற்கு தகுந்தாற்போல் வேறுபடும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் தற்போது உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் தங்களது விமான பயணங்களை ரத்து செய்யவே விரும்புகின்றனர். இந்த சமயத்தில் இவர்களுக்கெல்லாம் பயன்படும் விதமாக விமான நிறுவனங்கள் சலுகையை வழங்கி வருகின்றன.
செம ஆஃபர்
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு இண்டிகோ நிறுவனம் மறுசீரமைத்தல் கட்டணத்தை (rescheduling) மார்ச் 31 வரையில் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது கோ ஏர் நிறுவனம்
ரீபுக்கிங் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதோடு இண்டிகோவினை விட இன்னொரு படி மேலே போய், ரத்து கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 30 வரை பதிவு செய்யப்பட இருக்கும் டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண விகிதம் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.
நம்பிக்கையுடன் பதிவு செய்யலாம்
மார்ச் 8 முதல் ஏப்ரல் 30 வரை பதிவு செய்யும் டிக்கெட்டுகள் மூலம், செப்டம்பர் 30 வரையில் எந்த கோஏர் விமானத்திலும் பயணிக்க பதிவு செய்துகொள்ளலாம் எனவும், ஆக நம்பிக்கையுடன் டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள் என்று கோஏர் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் நீங்கள் எந்தவொரு காரணத்திற்காக அபராதமின்றி உங்கள் விமானத்தை ரத்து செய்யலாம் அல்லது மாற்றியமைக்கலாம் என்றும் கூறியுள்ளது.
‘சின்ன கண்டிசன்
மேலும் இந்த மாற்றங்கள் புறப்படும் தேதிக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் மாற்றங்கள் அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் கட்டண வேறுபாடு இருந்தால் அது மறுதிட்டமிடப்பட்ட டிக்கெட்டுகளில் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.
சரியான நிவாரணம் அளிக்க பரிந்துரை
இதற்கிடையில் டிக்கெட்டுகளை ரத்து செய்தல், ரீபண்ட் கொடுத்தல் உள்ளிட்டவற்றில் நிவாரணம் அளிப்பதில், தனியார் விமானங்களுக்கு அரசாங்கம் பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவில் என்ன சலுகை
இந்த நிலையில் இதே போன்று பொதுத்துறையை சேர்ந்த ஏர் இந்தியா ரத்து கட்டணத்தை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது. ஆபத்தான கொரோனா வைரஸானது சுற்றுலா துறையை கடுமையாக பாதித்துள்ளது. மக்கள் பெரும் அச்சத்தை கொண்டுள்ளதையடுத்து தங்கள் பயணங்களை ரத்து செய்கிறார்கள். பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் சியோல் போன்ற நகரங்களை இணைக்கும் தென் கிழக்கு ஆசிய வழித்தடங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில் தற்போது பல சர்வதேச விமான நிறுவனங்களும் மோசமான முன்பதிவுகளைத் காணத் தொடங்கியுள்ளன.