மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பிப்ரவரி 1ம் தேதியன்று பட்ஜெட் தாக்கலை செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் ஆனது சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது ஏற்கனவே சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் விலைவாசியானது உச்சத்தில் காணப்படுகின்றது. வேலை சந்தையானது மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையில் நடுத்தர மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நேர பட்ஜெட் இதுவாகும்.ஆக இதில் பல முக்கிய எதிர்பார்ப்புகள் உள்ளன.
வருமான வரி குறைப்பு
வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இது சம்பளதாரர்கள் மத்தியிலும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதமானது கடைசியாக 2016 - 2017 பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு மாற்றம் செய்யப்படவில்லை. இதில் 30% என்ற விகிதம் 25% ஆக குறைக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
வருமான வரி உச்ச வரம்பு
வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. தற்போது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் வருமான வரி உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். இதே குடிமக்களுக்கு இந்த விகிதமானது 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தற்போது மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதே சூப்பர் சீனியர்ஸ் என்படும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வருமான வரி உச்ச வரம்பு 12.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நீண்டகால மூலதன ஆதாய வரி
பங்கு சந்தையில் உள்ள ஈக்விட்டி முதலீடுகளுக்கு விதிகப்படும் நீண்டகால மூலதன ஆதாய வரியானது, வருடத்திற்கு லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும் போது வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த விகிதமானது 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது கடந்த 2004ல் இருந்து அளிக்கபப்ட்டு வருகின்றது.
ரயில்வே பட்ஜெட்
கடந்த பட்ஜெட்டிலேயே வந்தே பாரத் குறித்து அறிவிக்கப்பட்டது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 ரயில்களாக இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் இது படிப்படியாக உயர்த்தப்படலாம். இதி அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பான் அவசியமா?
பட்ஜெட்டில் அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைகளுக்கும் பான் கட்டாயமில்லை என்று அறிவிக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆதார் கார்டு இருந்தாலே போதுமானது என்று கூறப்படுகிறது. இதனை செயல்படுத்தும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. ஆக இதன் மூலம் பான் கார்டு இல்லாதவர்களும் எளிதில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இது தள்ளுபடியா?
தற்போது பான் எண் வழங்கப்படாவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் 206AA பிரிவின்படி, பரிவர்த்தனைக்கு 20% டிடிஎஸ் விதிக்கப்படும், இது ஒருவருடைய வருமான வரி வரம்பு குறைவாக இருந்தாலும் கூட 20% வரி கழிக்கப்படுகிறது. ஆக பான் எண் அவசியம் இல்லை எனும்போது இந்த வரியும் இருக்காது என்பது இன்னும் ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆக இது நிச்சயம் பெரும் வரவேற்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.